தென் மலபாரின் வள்ளுவநாட்டில், எலம்குளம் என்ற சிற்றூரில் 1909ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு குழந்தை பிறந்தது. யாரும் அறியவில்லை - அந்தக் குழந்தை ஒரு நாள் கேரளத்தின் வரலாற்றையே மாற்றிவிடும் என்று. பழமையான நம்பூதிரி பிராமணக் குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு வேத மந்திரங்களும், சமஸ்கிருத சுலோகங்களும்தான் வாழ்க்கை என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் வரலாறோ அதை மாற்றி எழுதி வைத்திருந்தது.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இ.எம்.எஸ்-ஐ தாயார் மட்டுமே வளர்த்தார். வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்று, ஒரு சிறந்த வேத பண்டிதராக வேண்டும் என்பதுதான் தாயாரின் கனவு. அந்தக் கனவுக்காக இ.எம்.எஸ் நான்கு வேதங்களையும் பண்டிதர்களிடம் கற்றார். ஆனால் அவரது மனம் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது.
எடக்குன்னி நம்பூதிரி பள்ளியில் சேர்ந்து படித்தபோது அவருக்கு ஆங்கிலம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. செய்தித்தாள்கள் மூலம் உலகத்தைப் பற்றி அறியத் தொடங்கினார். சமூகச் சீர்திருத்தம், தேசிய இயக்கம் என்று அவரது சிந்தனை விரிவடைந்தது. நம்பூதிரி சமூகத்தில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் அவருள் வளர்ந்தது.
“யோகஷேமம்” மற்றும் “உன்னி நம்பூதிரி” பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவரது எழுத்துக்களில் சமூக மாற்றத்திற்கான ஆவேசம் தெரிந்தது. பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி எழுதியபோது, அந்தப் புரட்சியின் தாக்கம் நம்பூதிரி சமூகத்திலும் ஏற்பட வேண்டும் என்ற அவரது ஆசை வெளிப்பட்டது.
காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறைச்சாலை அவருக்கு ஒரு பாடசாலையாக மாறியது. அங்கே புரட்சி வீரர் பகத் சிங்கின் சகாக்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. லெனினின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சிறையில் பிறந்த புதிய சிந்தனைகள் அவரை மார்க்சியத்தின் பாதைக்கு இட்டுச் சென்றன.
1934ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்த இ.எம்.எஸ், விரைவிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள கிளையை துவக்கினார். மலபார் விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபட்டார். விவசாயிகளின் வரிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ‘மாத்ருபூமி’ பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் விவசாயிகளின் துயரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.
1938ல் சென்னை சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் இரண்டாம் உலகப் போர் காலத்தில் கட்சித் தடைக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு என அரசு அறிவித்தும், மக்களின் பாதுகாப்பில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.
1942ல் கட்சித் தடை நீங்கியதும், தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று 75,000 ரூபாயை (இன்றைய மதிப்பில் பல கோடிகள்) கட்சியின் ‘தேசாபிமானி’ பத்திரிகைக்காக அளித்தார். தனது சொந்த வாழ்க்கையை துறந்து, கட்சிக்காகவே வாழத் தொடங்கினார்.
1957 - இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் முதலமைச்சரானார் இ.எம்.எஸ். கேரளத்தில் நிலச்சீர்திருத்தம், கல்விச் சீர்திருத்தம் என புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆனால் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பால் 1959ல் நேரு அரசு அவரது ஆட்சியைக் கலைத்தது.
மீண்டும் 1967ல் முதலமைச்சரானார். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பின்மையால் 1969ல் பதவி விலக நேர்ந்தது.
1978 முதல் 1992 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். இக்காலத்தில் கட்சி இந்தியா முழுவதும் வளர்ச்சி பெற்றது. சோவியத் யூனியன், சீனா, வடகொரியா, கியூபா போன்ற நாடுகளுடன் உறவை வளர்த்தார்.
அவரது படைப்புகள்:
- கேரள விவசாயிகள் இயக்கத்தின் வரலாறு (1943); - கேரளாவின் தேசிய இனப்பிரச்சனை (1952)
- மகாத்மா மற்றும் அவரது தத்துவம் (1958); - காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா (1967)
- நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன் (1976); - இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1986)ஆகியவை இஎம்எஸ்சின் முக்கியப் படைப்புகள் ஆகும்.
1998 மார்ச் 19 - கட்டுரை ஒன்றை தன் உதவியாளரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் காலமானார். கடைசி மூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர். எளிமை, தியாகம், அர்ப்பணிப்பு என்ற வாழ்வியல் நெறிகளை பின்பற்றிய மாபெரும் மனிதர்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்களில் ஒருவராக, கேரள மக்களின் விடுதலைக்காக போராடிய மாவீரராக, இந்திய கம்யூனிச இயக்கத்தின் தூணாக இ.எம்.எஸ் என்றென்றும் நினைவில் நிற்பார்.