சென்னை, மார்ச் 21 - சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை சட்ட மன்ற நடப்பு கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு மாநாடு வலியுறுத்தி உள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி திங்களன்று (மார்ச் 21) சென்னையில் சிறப்பு மாநாடு நடைபெற் றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தின் சுருக்கம் வருமாறு: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான வாழ்வாதற்கான உரிமை, சுதந்திரம், தன் உடலின் மீதான உரிமை, யாருடன் வாழ வேண்டும் என்கிற உரிமை ஆகியவற்றை சாதிய அமைப்பு கள் மீறுகின்றன. ‘கவுரவம்’, சாதித் தூய்மை என்ற பெய ரால் நடைபெறும் கொலை மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. சாதி, மத அமைப்புகள் அல்லது சமூகப் பஞ்சாயத்துகள், சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் கொடூரக் குற்றங்கள் அவற்றில் ஈடுபடும் பஞ்சாயத்துகள், நபர்கள் என ஒட்டுமொத்த குற்றத்தையும் கணக்கில் கொண்டு தண்டனைகள் வழங்கக் கூடிய சட்டம் தேவையாக உள்ளது.
பின்பற்றப்படாத வழிகாட்டுதல்கள்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை உறுதிப் படுத்துவதற்காக சாதி ஆணவப் படு கொலைகள் குறித்து உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல்வேறு தீர்ப்பு களை வழங்கியுள்ளன. உசிலம்பட்டி விம லாதேவி சாதி ஆணவப் படுகொலை வழக்கில், சாதி ஆணவப் படு கொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிகாட்டுதல் களையும் வழங்கியது. அதன்படி அரசு செயல்படவில்லை. அதன்பின், தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ் தொடர்ந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை யில் அவ்வாறு இல்லை.
சமூகப்புறக்கணிப்பு
சாதி ஆணவப் படுகொலைகள், இது தொடர்பான குற்றங்கள் பெரும்பாலும் சாதிய சமூகத்தினரை உள்ளடக்கிய பஞ்சாயத்து நடவடிக்கைகள் மூலமாகவே நடைபெறுகிறது. கொடூரமாகக் கொலை செய்வது அல்லது கொலைக்கு ஈடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடை பெறுகிறது. உதாரணமாக தம்பதியினர் அல்லது அவருடைய உறவினர்களை ஊரைவிட்டு வெளியேற்றுதல், அபராதம் விதித்தல், சமூக தடை விதித்தல், சமூகப் புறக்கணிப்பு செய்தல், பொருளாதாரத் தடை விதித்தல், பொருளாதாரப் புறக் கணிப்பு செய்தல், நிலம் அல்லது சொத்துக் கள் மீதான உரிமையை மறுத்தல், வெளி யேற்றுதல் போன்ற நடவடிக்கைகளிலும் கூட்டாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பற்ற நிலையில் தம்பதிகள்
இதுபோன்ற நேர்வுகளில் எவ்வா றெல்லாம் விதி மீறல்கள் காவல்நிலை யங்களில் நடைபெறுகிறது என்பதற்கு உசி லம்பட்டி விமலாதேவி வழக்கில் நடை பெற்ற தவறுகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் விரிவாகத் தெரி வித்துள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் பாதுகாப்பற்ற நிலையில் கைவிடப்படக்கூடிய சூழலே தொடர்கிறது. உடுமலை சங்கர் துவங்கி பல்வேறு சாதி ஆணவப் படுகொலைகள் காவல் நிலையங்களில் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ளப்படாததால் நடந்தவைகளே. எனவே சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட உடனடியாக சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய தனிச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். அதை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண் 123 கீழ் “கவுரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்பந்தம், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015 “முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அப்போதைய சட்டமன்ற குழுவின் தலைவர் அ.சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் தனிநபர் மசோதாவை சமர்ப்பித்ததையும் தமிழக அரசு கணக்கில் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி முன்மொழிந்தார். சாதி ஆணவப்படுகொலையில் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தினர் வழிமொழிந்தனர்.
பங்கேற்ற தலைவர்கள்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னணியின் சிறப்புத் தலைவர் பி.சம்பத், தலைவர் த.செல்லக்கண்ணு, பொருளாளர் இ.மோகனா, துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலச் செயலாளர் வி.ஜானகிராமன், தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பி.சுந்தரம், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆதித் தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், ஐந்திணை மக்கள் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் வை.தேவதாசு உள்ளிட் டோர் பேசினர்.