tamilnadu

img

வாரியத்தின் சுயேச்சையான அதிகாரத்தை பறிக்காதே!

சென்னை, ஏப்.19 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சுயேச்சையான அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி மின்வாரிய பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப். 19) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் அமைப்பின் பொதுச் செயலாளர் கே.அருள்செல்வன் கூறியதாவது:

மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொறியாளர்களுக்கும் 1.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமாக பதவிகள் நிரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழக அரசு வற்புறுத்தலையடுத்து மின்வாரியம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கக் கூடிய வகையிலும், வாரியத்தின் சுயேச்சையான அதிகாரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, அந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தடையாக இருக்கும் உத்தரவுகளை ரத்து செய்து, பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் இரண்டாம் நிலை பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மின்வாரிய அப்ரண்டிஸ் சட்ட திருத்தம்-2014இன் படி, ரயில்வேயில் வழங்கியுள்ளதை போல் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும், என்எல்சி, பெல், என்பிடிசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வழங்குவது போல் காலவரையறை செய்யப்பட்ட பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். 

மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, தரமான தளவாடப் பொருட்களை வழங்கி சேவையை மேம்படுத்த வேண்டும். வாரியத்தில் ஏற்படும் நட்டத்திற்கு ஊழியர்கள் காரணமில்லை. இதிலிருந்து மீள ஆலோசனைகளை முன்வைக்க தொழிற்சங்கங்கள் தயாராக உள்ளன. எனவே, தொழிற்சங்கங்களை அழைத்துப்பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ஆர்.குருவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் கே.ஆதன் இளங்கீரன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், பொருளாளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர்.