அறந்தாங்கி, ஜூன் 12- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மேல வசந்தனூர் கண்மாய் பகுதியில் வெள்ளியன்று காலை பலத்த வெடிகுண்டு வெடிக்கும் பலத்த சப்தம் கேட்டது. 30 கிமீ சுற்றளவிற்கு கேட்ட சப்தத்தையடுத்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், காலையில் வழக்கத்திற்கு மாறான சப்தத்துடன் விமானம் ஒன்று பறந்து வந்த போது நடுவானில் திடீரென குண்டு வெடித்தது போல் பலத்த சப்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் அங்கிருந்து மறைந்து விட்டது என்றனர். இந்நிலையில் ஆவுடையார்கோவில் தாலுகா மேலவசந்தம் கண்மாயில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கருவேல மரங்கள் அடியோடு எரிந்து சாம்பலாகி உள்ளது எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் கூறுகையில், பொதுமக்கள் பீதியடைந்துள்ள அளவிற்கு விமானம் ஏதும் விபத்துக்குள்ளானதற்கான தடயம் ஏதும் இல்லை என்றனர்.