tamilnadu

img

கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிடுக... மத்திய நிதி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை:
கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தில் மேற்கூறிய பொருள் மீது மத்திய அரசு சமர்ப்பித்துள்ள வாக்குமூலம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில்வந்துள்ளன. ஏற்கெனவே கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான இ.எம்.ஐ .தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடுவதைக் கைவிட வேண்டுமென்று நான் தங்களுக்கு கடிதம்எழுதியிருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

இது பேரிடரால் பெரும்துயருக்கு ஆளாகியிருக்கிற மக்களுக்கு  இழைக்கப் படும் அநீதி ஆகும். தற்போது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் இக்கோரிக்கை யை பரிசீலிப்பதாக மத்திய அரசு முன்வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அரசு “கஜேந்திர சர்மா (எ) மத்திய அரசு” வழக்கில் இது குறித்து சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் ரூ. 2 கோடி வரையிலான கடன்கள் மீது “வட்டிக்கு வட்டி” விதிப்பை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எல்லாக் கடன்களுக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆழமான நெருக்கடியை விட்டு மீண்டு வர உதவுமா என்ற கவலையை குறு, சிறு, நடுத்தர தொழிலதிபர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எல்லா குறு, சிறு, நடுத்தரதொழில்களுக்கும் இத் தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். 

இந்த முடிவு எல்லா வகையான நிதி நிறுவனங்களையும் அதாவது வங்கி அல்லா நிதி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக இருக்குமென்று நம்புகிறேன். அதற்குரிய வகையில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.  உங்களின் சாதகமான மறு மொழியை எதிர்நோக்குகிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.