tamilnadu

img

உழைப்பாளி மக்களின் ‘அரண்’ - மயிலைபாலு

“படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள்  ஏறு” ஓர் அரசன் ஏறுபோல் பீடு நடைபோட்டு அரசாள வேண்டும் என்றால் ஆறு அம்சங்கள் அவசியம் என்று இந்தக் குறள்  கூறுகிறது. அவற்றில் ஒன்று அரண்.  அரண் என்றால் பாதுகாப்பு. ஈ, எறும்பால் கூட பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும் இடம் என்பதால்தான் அரசனின் மனைக்குப் பெயர் ‘அரண்மனை’.  நாமெல் லாம் வாழ்வது பாதுகாப்பற்ற வெறும்  ‘மனை’. மன்னர்கள் காலத்தில் அகழியும் கோட்டையும் வானளாவிய மதில் சுவர் களும் அரண்களாக இருந்தன. இவை தான் இன்று குண்டு துளைக்காத  சட்டை களாகவும், எந்திரத் துப்பாக்கி ஏந்திய  காவலர்களாகவும், கருப்புப் பூனை களாகவும் மாறியிருக்கின்றன.  ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு எப்போதும் அரண் தேவைப்படுகிறது. அதற்காகப் பெரும் செலவு செய்யப்படுகிறது.

மன்னர்களுக்கு இணையாக பாது காப்புடன் வாழ்ந்தவர்கள் வணிகர்கள். அவர்களுக்கு ஈடாகவும் அதற்கு மேலாக வும் இன்று வளர்ந்திருப்பவர்கள் பெரு முதலாளிகளும், கார்ப்பரேட் நிறு வனங்களின் முதலாளிகளும்தான். அவர் களும் பெரும் பாதுகாப்புடன்  இருக்கிறார்கள். காலம் எதுவாக இருந்தாலும் பாது காப்பில்லாமல் இருப்பவர்கள் உழைக்கிற மக்கள்தான். அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க காவல்துறையும், பல வகை யான படைப் பிரிவுகளும்,  முதலாளி களின் ஏவல் ஆட்களும்,  அதிகாரிகளும் இருக்கின்றனர்.  அப்படியென்றால் உழைக்கிற  மக்களுக்கு அரண் எது?   பாதுகாப்பு எங்கிருந்து வரும்?  என்ற கேள்விகளின் மேல் கட்டி எழுப்பப்பட்டி ருக்கும் இலக்கியப் படைப்புதான் ‘அரண்’.

இந்த அரணுக்கு அஸ்திவாரக் கல்லாக  இருப்பவர் முத்து மாடத்தி.  40 வயதை எட்டும் போலிருந்த இவர்,  முதலாளிமாரின் வஞ்சகத்திற்குக்  கணவனைப் பலி கொடுத்தவர்.  ஒரு பெண் குழந்தையோடு கைக்கும் வாய்க்குமான போராட்டத்தை நடத்தினாலும் முதலாளி வைரவனை எதிர்த்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அட்சய பாத்திரமாக இருக்கிறார். ‘பத்து நாள் வேலை இல்லாமல் போனால் தொழிலாளி வீட்டு அடுப்பில் பூனை தூங்கும். பயலுக தானா வந்து சர ணாகதி அடைவாங்க’ என்று மனப்பால் குடிப்பதுதான் முதலாளிமார்களின் தந்திரம். ஆனால் ‘எத்தனை நாளானாலும் போராடுங்க.  அத்தனை நாளைக்கும், அத்தனை பேருக்கும் நான் சோறாக்கி போடுறேன்’ என்று தைரியம் அளிக்கிற முத்து மாடத்தியை எண்ணிப் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியாது.  இது கற்பனாவாதமாகக் கூட கருதப்படலாம். ஆனால் முத்து மாடத்தி போல் ஊரையே ஒருங்கிணைத்து செயல்பட்டால் கற்பனை யும் சாத்தியமானது தான் என்பதை நாவலின் போக்கு புரிய வைக்கிறது.

தொழிலாளர்கள் மட்டும் போராடினால் போதாது;  போராட்டம் ஏன்? எதற்கு? என்று அவர்களின் குடும்பங்களுக்குப்  புரியவைக்க வேண்டும். அதற்காக ஆளுக்குப் பத்து வீடு என்று தேர்வு செய்து பேச வேண்டும் என்கிற யோசனை சாமானியமானது அல்ல. இதனை முறையாக செயல்படுத்தி வெற்றி கண்டால் ‘கருங்காலி’ என்று சொல்லே  காணாமல் போய்விடும் அல்லவா? ஒரு தொழிற்சாலையில் நடத்தப்படும் போராட்டத்தின் போது, அரட்டல், மிரட்டல்,  காவல்துறை மூலம் வழக்கு,  விசாரணை,  சிறை ..... இன்னும் இன்னும் தொடரும் அடக்குமுறைகள் ஏராளம். இவை  எல்லாம் முதலாளிகள் கட்டமைத்துக் கொள்ளும் நவீன அரண்கள். அவற்றை துவம்சம் செய்து முன்னேற ஆள் பலம் மட்டு மல்ல மனோபலமும் வேண்டும் என்பதை நாவலில் வேண்டுமளவு பரப்பி வைத்திருக்கிறார் நாவலாசிரியர் அல்லி உதயன்.

முத்து மாடத்தி மட்டுமின்றி வடிவேலு, கேரள புத்திரன், ராமசாமி, முத்துசாமி, குமார், ஜோதிராம், முத்துக்கண்ணன், மொக்கேட்டு (மொக்கசாமி+ஏட்டு-சாமி= மொக்க ஏட்டு > மொக்கேட்டு), அவ னது மனைவி நாகமணி, ரெபெக்காள், காதர் மைதீன் போன்ற  கதாபாத்திரங்கள் நாவலை நடத்திச் செல்ல வழிகாட்டு கின்றன; வலுசேர்க்கின்றன. ஒவ்வொரு பாத்திரத்தையும் ஆசிரியர் சிந்தித்து செதுக்கியிருக்கிறார். “எளியவனை வலியவன் அடித்தால் வலியவனை வாசப்படி இடிக்கும்”, “பத்து பேரு பல்லுகுச்சி ஓராளு தலைச்சுமை” என்பது போன்ற வழக்குத் தொடர்கள் கதையோட்டத்திற்கு அழகு சேர்க்கின்றன. கதைக்களம் பழைய ஸ்பின்னிங் மில், திரட்டப்பட்ட தொழிலாளிகள் என்று  இருக்கலாம். ஆனால், நவீன தாராள மயம் பொன்மான் வேடம் போட்டு ஆசை காட்டினாலும் உழைப்பாளிகள் (கருத்தா லும்,  கருத்தாலும்) இறுதியில் எடுக்கப் போவதும் எடுக்க  வேண்டியதும் போராட்ட ஆயுதம்தான். அதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், அத்தக்கூலிகள், அறிவு ஜீவிகள் அனைவரும் கரம் கோர்ப்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிடும். அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ளப் போகும்  பிரச்சனைகள், தீர்வுக்கான வழிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கப் போகின்றன. அதற்கான ஒரு பதிவாகவே இந்த நாவலைப்  பார்க்க வேண்டும். போராட்டக் களத்தின் கொதி நிலைகள்,  முதலாளித்துவத்தின் சூது வாதுகள்பற்றி இந்தத்  தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், உள்ளத்தில் உறுதியோடு எதிர்காலத்தில் செயல்படவும் நிச்சயம் இந்த அரண் உதவும்.

அரண்
ஆசிரியர்: அல்லி உதயன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொலைபேசி: 044 - 2433 2924
பக்கம்: 160; விலை: ரூ.150/