tamilnadu

img

மாண்டஸ் புயல்-மழையால் வீடு இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்க கோரிக்கை

சென்னை, டிச. 13- புயல் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனா ளிக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி தலைமையில் வடசென்னை மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன், செயலாளர் எஸ்.ராணி, பொருளாளர் ஆர்.நடராஜன், அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ரவி ஆகியோர் மாற்றுத்திறனாளி ஆணையரை சந்தித்து திங்களன்று (டிச. 12) மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை சைதாப்பேட்டையில் புயல் மழையால் வீடு இடிந்து மாற்றுத்திறனாளியின் மீது விழுந்து பாதிக்கப்பட்டுள்ள கேசவலு, அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் நான்கு மாத குழந்தை இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குழந்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிரந்தரமாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்க வேண்டும். சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்.

அம்பத்தூர் பகுதியில் இயங்கி வரும் கொக்கோ கோலா நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளை தொடர்ச்சியாக மிரட்டி வரும் நிர்வாகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடிதமும் வழங்காமல் இந்த மாதத்துடன் வேலையை விட்டு நீக்குவதாக தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி முதல் மாடியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க  இயலாத காரணத்தால், அவருடைய பதவி உயர்வை ரத்து செய்துள்ளனர். அனைத்து அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்வைப்புத் தொகை இல்லாமல் ஆவின் நிறுவனம் நடத்திக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிட்ட போதிலும் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பது பெரும் சிரமமாக உள்ளது.

அரசு அலுவலர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள். வடசென்னை மாவட்டத்தைச் சார்ந்த 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்கக் கோரி பலமுறை கடிதம் அளித்தோம். அதன் மீது இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க பரிந்துரை செய்து கடிதம் அளித்த போதும் இதுவரை வீடு வழங்கவில்லை. கூட்டுறவு துறையின் மூலம் நடைபெற உள்ள ரேசன் கடைகளுக்கான ஊழியர்கள் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 நபர் கொண்ட மருத்துவச் சான்று கேட்டு அலைக்கழிக்க கூடாது. பல மாவட்டங்களில் சான்றிதழ் தேவையில்லை என பத்திரிக்கை செய்தி வெளியிட்ட நிலையில் சென்னை மாவட்டத்திலும் பத்திரிகை செய்தி வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை உதவித்தொகை ரூ. 2,000 வழங்கப்படாமல் உள்ளது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.