tamilnadu

img

கட்டுப்பாட்டு பகுதியாக தில்லி

தலைநகர் தில்லியில் ஜி-20 உச்சி மாநாடு வருகிற செப்.9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்கும் நிலையில், தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தில்லி போலீசார், மத்திய ரயில்வே போலீசார் என சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் நாட்டின் உயரடுக்கு தேசிய பாதுகாப்புப் படையின் கே 9 மோப்ப நாய் குழு பிரிவினர், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினருடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை தில்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.