வியர்வையில் கருத்த
வெற்றுமஞ்சள் கயிறோடு ஒருகையில்
ஒயர்க்கூடையில் சாப்பாடும்
இன்னொரு கையில்
ஈன்றவளையும் இழுத்துக்கொண்டு
தயங்கித் தயங்கி நுழைகிறாள்
அந்தப் பள்ளிக்கூடத்தில்
சித்தாள் வேலைக்குப் போகிற
அவசரத்தில் அந்தப் பெண்.
தழையத்தழைய வெள்ளை வேட்டி
தொந்திவரைத் தொங்கும்
எருமைச் செயினோடு
ஆடிக்காரில் வந்திறங்கி
ஆர்.டி.இ. அப்பிளிகேசன்
கொடுக்கிறது ஒரு பெருந்தலை.
ஒருமாதம் அலைக்கழிக்கப்பட்டு
வாங்கிய சான்றிதழ் நகல்களை
பிளாஸ்டிக் கடுதாசியிலிருந்து
நடுங்கிய படியே எடுத்து நீட்டுகிறது
அந்த ஏழைக் கை.
அம்பது நூறு அடிச்சு
தினக்கூலி என வாங்கிய
சான்றிதழ்களை
திமிரோடு நீட்டுகிறது
செல்வந்தக் கை.
இங்கே எல்லாமே குலுக்கல் தான்மா
எல்லாக் குழந்தை பேரையும்
எழுதிப் போடுவோம்
யாருக்கு அதிர்ஷ்டமிருக்கோ
அவங்களுக்கே சீட்டு என ஒப்பிக்கிறாள்
அலுவலகப் பணிப்பெண்.
ஆடிக்காரரை அலட்சியமாய்
பார்த்துவிட்டு அடப் போம்மா
அந்த அதிஷ்டம் இருந்தால் தான்
எம்புள்ள அவருவூட்டுல
பொறந்திருக்குமே ...என
பெருமூச்சோடு பிய்ந்த செருப்பை
இழுத்து இழுத்து நடக்கிறாள்
சித்தாள் வேலைக்கு அந்தப் பெண்.
- காசாவயல் கண்ணன்