tamilnadu

img

நாகூர் பட்டினச்சேரி கடலில் கச்சா எண்ணெய் கலப்பு

நாகப்பட்டினம், மார்ச் 3- நாகப்பட்டினம் மாவட்டத்தின் மீனவர் கிராமங்களான நாகூர்  பட்டினச்சேரி, நம்பியார் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கடல் நீரில் கச்சா எண்ணெய் கலந்திருப்பதை கண்டு மீனவ மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  நாகப்பட்டினத்தை அடுத்த பனங்குடியில் சிபிசிஎல் (சென்னை  பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) என்ற சுத்திகரிக்கப்படாத எண்ணெய்யை தரம் பிரித்து பெட்ரோல்,  டீசல், மண்ணெண்ணெய், ஆயில் என விற்பனை நிலையங் களுக்கு அனுப்பும் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் கச்சா எண்ணெய், கடற்கரையில் இருந்து கடலில் உள்ளே 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பம்பிங் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலமாக ஆலைக்கு அனுப்பப்படும்.  இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாயின் இணைப்புப் பகுதியில் சிதைவு ஏற்பட்டு கச்சா எண்ணெய் முழுவதும் கடலில் கலந்துள்ளது. இத னால் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கின.  இதுகுறித்து, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கூறுகையில், ‘‘கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய், மற்ற மீனவ கிராமங்களுக்கும் செல்கிறது. அரசும்,  சம்பந்தப்பட்ட துறைகளும் துரிதமாக செயல்பட்டு கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்தி, மீன வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.