tamilnadu

img

காகத்தின் தந்திரம்

உதயசங்கர்  கா கா கா கா கா கா கா மின்னிக்காகம் கரைந்தது. யாரும் அருகில் இல்லை. மின்னிக்காகத்தின் முன்னால் முழுதாக ஒரு உளுந்த வடை கிடந்தது. மின்னிக்காகம் சுற்றிலும் பார்த்தது. யாரும் இல்லை. உடனே வடையைக் கவ்விக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் கிளையில் உட்கார்ந்தது. ஒரு துண்டை வடையைக் கொத்தித் தின்றது.  கா கா கா கா இன்னொரு துண்டு உளுந்தவடையைக் கொத்தித் தின்றது. கா கா கா கா வயிறு நிறைந்து விட்டது. மீதியிருந்த வடையை என்ன செய்வது? மின்னிக்காகம் யோசித்தது. யோசித்தது. யோசித்துக் கொண்டேயிருந்தது. அப்போது சின்னிக்காகம் பறந்து வரும்போதே, கா கா காக்கா க்ர்ர்ர்.. எனக்குப் பசி.. எனக்குப் பசி.. என்று கத்தியது. சின்னிக்காகத்தின் குரலைக் கேட்டதும் மின்னிக்காகம் காலின் கீழ் இருந்த வடையை வாயில் கவ்விக் கொண்டு பறந்தது. ஏன் மின்னிக்காகம் பறந்து விட்டது? சின்னிக்காகத்துக்குப் புரியவில்லை. கா காக்க்கா எனக்குப் பசி.. எனக்குப்பசி.. என்று மறுபடியும் கத்தியது. பறந்து போன மின்னிக்காகம் ஒரு புதர்ச்செடியின் கீழ் உட்கார்ந்தது. அங்கே மீதியிருந்த வடையைப் போட்டது. பிறகு அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து வடையை மூடியது. ஆனாலும் கொஞ்சம் வடை வெளியில் தெரிந்தது. இன்னொரு கல்லை எடுத்து மறுபடியும் மூடியது. இப்போது வடை தெரியவில்லை. கா கா கா கா.. நான் வடையை ஒளிச்சு வைச்சுட்டேன். என்று கரைந்து கொண்டே பறந்து போய் விட்டது. பிறகு மின்னிக்காகம் வடையை மறந்தே விட்டது. திடீரென்று ஒரு நாள் ஞாபகம் வந்தது.  ஆனால் எந்தப் புதரில் ஒளித்து வைத்தோம் என்று ஞாபகம் வரவில்லை. இன்னமும் ஒளித்து வைத்த வடையைத் தேடிக் கொண்டிருக்கிறது மின்னிக்காகம். கா கா கா கா அடுத்தவருக்கு உதவுங்கள்.. கா கா கா கா  மின்னிக்காகம் பாடுவது கேட்கிறதா?