வக்பு சட்டத் திருத்தத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்'
புதுக்கோட்டை, ஏப்.20- மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத்திருத்தத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் துரை.அரிபாஸ்கர், ஏ.லாசர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் முகமதுஜான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் முகமது சுலைமான், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், எம். பாலசுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுச்சாமி, விசிக ஒன்றியச் செயலாளர்கள் செல்வரத்தினம், சகதிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஓய்வூதியர்களுக்கு ரயிலில் 50 சதவீதம் சலுகை: மீண்டும் வழங்க வேண்டுகோள்
கரூர், ஏப்.20- அகில இந்திய ஓய்வூதியர் சங்கம் திருச்சி மாவட்டம், கரூர் கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் என். சேட்டு தலைமை வகித்தார். கிளை செயலாளர் டி.மனோகரன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலாளர் கே. சின்னையன், மாவட்டத் தலைவர் ஐ.ஜான்பாஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5 ஜி சேவையை வழங்க வேண்டும். கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும். ரயிலில் ஓய்வூதியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சியில் நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டிற்கு, கரூர் கிளையில் இருந்து 9 பேர் பிரதிநிதிகள் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். ஜி. பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.