tamilnadu

img

விவசாய கடன் தள்ளுபடி, பயிர் இன்சூரன்ஸ் குளறுபடியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விவசாய கடன் தள்ளுபடி, பயிர் இன்சூரன்ஸ்  குளறுபடியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜுன் 2-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை கண்டித்து சிங்களாந்தி, கொக்கலாடி, தலைக்காடு, ஆதிரெங்கம், தென்பாதி, எழிலூர் இராயநல்லூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகக் கிளையின் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நான்கு ஆண்டுகளாக பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முறையாக முழுமையாக அனைத்து ஊராட்சிகளுக்கும் பயிர் இழப்பீடு வழங்காததைக் கண்டித்தும், இன்சூரன்ஸ் கட்டிய அனைவருக்கும் நிவாரணம் வழங்கிடக் கோரியும், 2024 ஆம் ஆண்டு வழங்கிய விவசாய கடனை தள்ளுபடி செய்து, 2025 ஆம் ஆண்டிற்கான விவசாய கடனை எந்தவித நிபந்தனையுமின்றி வழங்கிடக் கோரியும், நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த நிபந்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதை தவிர்த்து முழுமையாக உத்தரவினை திரும்பப் பெறக்கோரியும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் உரையாற்றினார். மூத்த தலைவர் டி. சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் டிவி. காரல்மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பவானி, ஒவ்வொரு மையங்களிலும் சி. வீரசேகரன், என். வீராச்சாமி, எஸ். முத்துச்செல்வன், வி.ரவி, கே.மதியழகன், என்.சுந்தரேசன், பி.உலகநாதன், ஆர்.வேதையன், ஆர்.மதியழகன், ஜி.கலைச்செல்வி, யு.ராமச்சந்திரன், கே.வேணுகோபால் ஆகிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சியின் கிளைச் செயலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.