கண்ணூர், ஏப்.6- சிபிஎம் அகில இந்திய 23 ஆவது மாநாட்டின் ஒரு பகுதியாக வியாழனன்று (ஏப்.7) மாலை 5 மணிக்கு சி.எச்.கணாரன் நகரில் (கண்ணூர் டவுன் சதுக்கம்) ‘மதச்சார்பின்மைக்கான சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். மத்திய குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன் தலைமை தாங்குகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் (எஸ்) கட்சியின் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் பேசுகின்றனர்.
கலாச்சார மாநாடு
வெள்ளியன்று (ஏப்.8) மாலை 5 மணிக்கு கண்ணூர் டவுன் சதுக்கத்தில் நடக்கும் கலாச்சார மாநாட்டை சாகித்ய அகாடமி தலைவர் கே.சச்சிதானந்தன் துவக்கி வைக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தலைமை வகிக்கிறார். கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், எம்.முகேஷ் எம்.எல்.ஏ., கவிஞர் பிரபாவர்மா ஆகியோர் பேசுகின்றனர்.
‘மத்திய - மாநில உறவுகள்’
சனிக்கிழமையன்று (ஏப்.9) ஏ.கே.ஜி.நகரில் (கண்ணூர் ஜவஹர் ஸ்டேடியம்) மாலை 5 மணிக்கு ‘மத்திய மாநில உறவுகள்’ குறித்த கருத்தரங்கை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர். கே.வி.தாமஸ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.