tamilnadu

img

‘பணப்பட்டுவாடா புகார் நாங்குநேரி தேர்தலுக்கு தடையில்லை’

மதுரை:
நாங்குநேரி இடைத் தேர்தலை நடத்தத் தடை இல்லை என சென்னைஉயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் சென்னைஉயர்நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல்  செய்திருந்தார். அதில்,” நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சிசட்டமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தலா ரூ.இரண்டாயிரம்  வழங்க அதிமுகவினர் முடிவுசெய்துள்ளனர். இவர்களை தொகுதியில் இருந்து வெளியேற்ற தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொகுதியில் 20 கோடி வரை பணப் பட்டுவாடா நடந்துள்ளது.

எனவே நாங்குநேரி இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தலை அக்டோபர் 21-ஆம்தேதிக்குப் பிறகு நடத்த  உத்தரவிடவேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.இந்த மனு வெள்ளியன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதுடன், வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. மேலும் ரூ.19லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டுக் கொண்ட  நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு,  தேர்தல் அறிவித்த பின் தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றனர். வழக்கு தொடர்ந்துள்ள சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன், குறிப்பிட்டுள்ள பண பட்டுவாடா, தேர்தல் வாக்கு இயந்திரங்களை மாற்றியது குறித்து தேர்தல் கமிஷன் கருத்தில் கொண்டு, தேர்தல்,வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.