நாகர்கோவில். பிப். 18- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் அதிமுக சார்பில் பணப்பட்டு வாடா நடைபெறுவதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதிமுகவினருக்கும், அங்கு வந்த பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் 11 வது வார்டில் அதிமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜாவும் அவரை எதிர்த்து அதே நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யா சிவராம் (மகன் சிவராமின் மனைவி) பா.ஜ.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். பிப். 19 (இன்று) தேர்தல் நடைபெற இருக் கின்ற நிலையில், நாகர்கோவில் வடசேரி கலுங்கடி பகுதியில் நாஞ்சில் முருகேசன் தனது மகள் ஸ்ரீலிஜாவுக்கு ஆதரவாக பணப் பட்டுவாடா செய்வதாக பறக்கும்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படை யில் நாஞ்சில் முருகேசன் வந்ததாக கூறப்படும் காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்தக் காரில் நாஞ்சில் முருகேசன் இருந்துள் ளார். பணப்பட்டுவாடா செய்வது குறித்து தகவல் அறிந்த பாஜக வேட்பாளர் திவ்யா வின் கணவரும் நாஞ்சில் முருகேசன் மகனு மான சிவராம் அங்கு வந்தார். இதனைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசனின் கார் ஓட்டுநருக்கும் நாஞ்சில் முருகேசனின் மக னுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்கு வாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் பணம் சிக்கவில்லை.