ரத்தினக் கம்யூனிஸ்ட்
சண்டைக் காட்சிகளில் நடித்துவந்த புலிகேசி என்ற சண்டைக் கலைஞர் திடீரென மரணமடைந்தார். அதனால் அவருடைய குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியானது. அது குறித்த சிந்தனையோடு இறுதி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ரத்தினம். புலிகேசி அடக்கம் செய்யப்பட்ட மயானத்திலேயே ‘ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் யூனியன்’ தொடங்கப்பட்டது. குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வந்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய ஒரு போராட்டத்தை ஜூடோ ரத்தினம் தொடங்கினார். அவர் உள்ளிட்ட சங்கத் தலைவர்களை அன்றைய மாநில அரசு காவல்துறையை ஏவிவிட்டுக் கைது செய்தது. ஆனாலும் போராட்டம் பின்வாங்கிவிடவில்லை. ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காகச் செயல்பட்டு வந்த 24 சங்கங்களை இணைத்து இயக்குநர் நிமாய் கோஷ், இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் இருவரும் ஒரு சம்மேளனத்தை துவக்கினார்கள். இவர்களும் செங்கொடி இயக்கச் சிந்தனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்மேளனமும் போராட்டத்தில் இறங்கியது. அன்று திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய படங்களில் நடித்து வந்த ஸ்டண்ட் கலைஞர்கள் இந்த சம்மேளனத்தில் இணையவில்லை. சம்மேளனம் நடத்திய போராட்டத்திற்கு எம்.ஜி.ஆர். எதிர்ப்பாகவே இருந்தார். போராட்டம் நீடித்தது. பம்பாய் நடிகர் சங்கம் இப்பிரச்சனையில் தலையிட்டதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் சமாதானத்திற்கு வந்தார்கள். போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது.
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனின் அண்ணன் மகன்தான் தோழர் எம்.பி. சீனிவாசன். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். வங்கத்திலிருந்து சென்னைக்கு வந்து ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர் தோழர் நிமாய் கோஷ். அவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். தோழர் ரத்தினம் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற அடிப்படையில், குடியாத்தத்தில் இருந்தபோது கட்சியின் பல போராட்டங்களில் கலந்துகொண்டு நான்கு மாதங்கள் வரை சிறை சென்றிருக்கிறார். அப்படி ஒரு முறை சிறையிலிருந்தபோது தன்னுடைய மகளுக்கு சிறைவாணி என்று பெயர் வைத்தார்! பின்னாட்களில்குடியாத்தத்தில் லெனின் பெயரில் திருமண மண்டபம் கட்டினார். இவரது துணைவியார் கோவிந்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஐந்து மகள்கள். ஒரு மகன் ராமமூர்த்தி கொல்கத்தாவில் திரைப்படத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறார். இன்னொரு மகன் கோபிநாத் சென்னையில் ஸ்டண்ட் மாஸ்டர். மற்றொரு மகன் பகத்சிங் சென்னையில் ஒளிப்பதிவாளர். புகழ்பெற்ற திரைப்பட சண்டை இயக்குநராக லட்சக்கணக்கில் பொருளீட்டியபோதிலும், இயக்க லட்சியத்திலிருந்து ஒருபோதும் தடம் விலகியதில்லை. பல நடிகர்களுக்கு டூப்பாக நடித்திருக்கிறார் என்றாலும், உண்மையில் இவர்தான் ஒரிஜினல். 1947ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான இவர் 1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்தார். 1952ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு சென்றதையும், பி.ராமமூர்த்தி, ஏ.கே. கோபாலன், வி.பி. சிந்தன், ஆந்திராவைச் சேர்ந்த நாகி ரெட்டி போன்ற தலைவர்களை பார்த்ததையும் வாழ்நாள் முழுதும் ஒரு பெருமைக்குரிய அனுபவமாகக் கருதினார். அக்காலத்தில் ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தலைமறைவாக செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அவர்கள் மாறு வேடம் போட்டுக்கொண்டு நடமாடுவதற்கு உதவினார் ரத்தினம். “அவர்களை பாதுகாக்கிற பொறுப்பில் எனக்கு அப்போது கிடைத்த அந்த வாய்ப்பை இன்று நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது தோழர்” என்பார் ரத்தினம். கடந்த 70 ஆண்டு காலமாக கட்சி உறுப்பினராக தோழர் ஜூடோ ரத்தினம் இருந்தார்.
தீக்கதிரில் வெளியாகி வரும் களப்பணியில் கம்யூனிஸ்டுகள் தொடரில், தோழர் ஜூடோ ரத்தினம் குறித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையிலிருந்து...
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்டண்ட் இயக்குனராக பணி யாற்றியவர் தோழர் ஜூடோ ரத்தினம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1500 படங்களுக்கு ஸ்டண்ட் இயக் குனராக பணியாற்றிய இவர், வயது மூப்பு காரணமாக (ஜன., 26) வியாழனன்று மாலை 4:30 மணியளவில் காலமானார். சினிமாவில் இவர் கடந்து வந்த பாதை மிகவும் சவாலானது. உயிரைப் பணயம் வைத்து, நிஜத்தில் பல சாகசங்கள் புரிந்து திரையில் தோன்றும் கதாநாயக நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கை என்பது போராட்டக் களமானது என்றால் அது மிகையன்று. அப்படிப்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள், நம் தென்னிந்திய திரை வானில் கோலோச்சி இருந்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடும் படியான ஒருவர் ஜூடோ கே.கே. ரத்தினம். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரத்தினம், ஆகஸ்ட் 8, 1930இல் பிறந்தார்.
சினிமா அறிமுகம்
“மகாபாரதம்” மாசிலாமணி என்பவரிடம் தேகப் பயிற்சியை யும், தென்னிந்திய பாக்ஸிங் சாம்பியன் பரமசிவனிடம் பாக்ஸிங் பயிற்சியும், ஜி. ராமுவிடம் ஜூடோ பயிற்சியும், தங்கவேலு விடம் யோகாசனப் பயிற்சியையும் முறையாக கற்று தேர்ச்சி பெற்றிருந்தார் ரத்தினம். முகவை ராஜமாணிக்கம் என்ற திரைப்பட கதாசிரியரின் சிபாரிசின் மூலம் திரைப்பட இயக்குநர் முக்தா வி.சீனிவானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து, அவர் இயக்கிய “தாமரைக் குளம்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி, ஒரு நடிகராக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் ஜூடோ கே.கே.ரத்தினம். 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் எம்.ஆர் .ராதாவின் உதவியாளராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகரில் இருந்து ஸ்டண்ட் இயக்குநராக...
பின்னர் இயக்குநர் முக்தா சீனிவாசன் வாயிலாக மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் அறிமுகம் கிடைத்து அதன் மூலம், 1963ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “கொஞ்சும் குமரி” திரைப்படத்திலும் ஒரு நடிகராகவே தோன்றி நடித்த கே.கே.ரத்தினம், 1966ஆம் ஆண்டு அதே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், ஜெய்சங்கர் நாயகனாக நடித்து வெளிவந்த “வல்லவன் ஒருவன்” திரைப்படத்தின் மூலம் ஒரு ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
‘ஜூடோ’ என்ற பட்டம்
ஜூடோ என்ற சண்டை உத்தியை பயன்படுத்தி, தான் பணி புரிந்த திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளை வித்தியாசமான தாகவும், விறுவிறுப்பான காட்சிகளாகவும் அமைத்து, அனைத்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றார். இதனடிப்படை யில் தமிழ் கலை இலக்கிய மன்றம் இவருடைய பெயருக்கு முன் ‘ஜூடோ’ பட்டமும் வழங்கியது. அன்றிலிருந்து ஜூடோ கே.கே. ரத்தினம் என்றும் அழைக்கப்பட்டார். குறிப்பாக ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த “முரட்டுக்காளை” திரைப்படத்தில், ஓடும் ரயிலில் வில்லன்களோடு ரஜினி மோதும் வகையில் இவர் அமைத்திருந்த சண்டைக்காட்சி அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற சண்டைக்காட்சி என்றால் அது மிகையல்ல.
ரஜினிக்கு மட்டும் 46
“முரட்டுக்காளை”, “நெற்றிக்கண்”, “போக்கிரி ராஜா”, “புதுக்கவிதை”, “எங்கேயோ கேட்ட குரல்”, “பாயும் புலி”, “துடிக்கும் கரங்கள்”, “சிவப்பு சூரியன்”, “அடுத்த வாரிசு”, “நான் மகான் அல்ல”, “தம்பிக்கு எந்த ஊரு”, “கை கொடுக்கும் கை”, “நல்லவனுக்கு நல்லவன்”, “படிக்காதவன்”, “மிஸ்டர் பாரத்”, “விடு தலை”, “மனிதன்”, “குரு சிஷ்யன்”, “தர்மத்தின் தலைவன்”, “ராஜா சின்ன ரோஜா”, “அதிசயப்பிறவி”, “பாண்டியன்” என ரஜினி யின் 46 திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்திருக் கின்றார் ஜூடோ கே. கே. ரத்தினம். “சகலகலா வல்லவன்”, “தூங்காதே தம்பி தூங்காதே”, “ஒரு கைதியின் டைரி”, “உயர்ந்த உள்ளம்”, “மங்கம்மா சபதம்”, “நானும் ஒரு தொழிலாளி”, “பேர் சொல்லும் பிள்ளை” போன்ற திரைப்படங்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து, தனது வித்தியாசமான ஸ்டண்ட் உத்திகளை பயன்படுத்தி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக அறியச் செய்தார். மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் 52 திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இவர் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
டாப் நடிகர்களுக்கு ‘வாத்தியார்’
தென்னிந்திய திரைவானில் இவர் சண்டை பயிற்றுவிக்காத கதாநாயக நடிகர்களே இல்லை எனும் அளவிற்கு அனைத்து முன்னணி நாயகர்களோடும் பணிபுரிந்த பெருமையும் இவருக்குண்டு. சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன், கே.பாக்யராஜ் என தமிழிலும், என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வ ரராவ், கிருஷ்ணா, சோபன்பாபு, கிருஷ்ணமராஜு, மோகன்பாபு, வெங்கடேஷ் என தெலுங்கிலும், ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ் என கன்னடத்திலும், அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, கோவிந்தா எனஇந்தியிலும் அத்தனை ஜாம்பவான் நடிகர்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து அவர்களுடைய எண்ணற்ற திரைப்படங்களை வெற்றிப் படங்களாக்கியதில் இவருடைய பங்கு அளப்பரியது.
தயாரிப்பாளர்
1960களிலேயே ஸ்டண்ட் மாஸ்டராக அறியப்பட்ட இவர், எம்ஜிஆரின் திரைப்படங்களுக்கு மட்டும் பணிபுரியும் சூழல் ஏற்பட வில்லை. ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டும் நின்று விடாமல் ‘‘ஒத்தையடிப் பாதையிலே’’ என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை உருவாக்கிக் கொண்டார்.
கடைசிப்படம் தலைநகரம்
‘தாமரைக் குளம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘காயத்ரி’, ‘போக்கிரி ராஜா’, ‘நாணயமில்லாத நாணயம்’, ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஒரு நடிகராகவும் அறியப்பட்ட இவர், 2006-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான சுந்தர். சி. நடிப்பில் வெளிவந்த ‘தலைநகரம்’ என்ற திரைப் படத்தில் ஒரு வில்லனாக தோன்றி நடித்திருந்ததே இவரது கடைசி திரைப்படம்.
1500 படங்கள்
ஏறக்குறைய தனது 63 ஆண்டுகால வெள்ளித்திரைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் 1500க்கும் அதிகமான திரைப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக திறம்பட பணிபுரிந்திருக்கும் ஜூடோ கே. கே. ரத்தினம், பல திறமையான ஸ்டண்ட் மாஸ்டர்களையும் இந்த வெள்ளித்திரைக்கு தந்திருக்கின்றார் என்பது தான் உண்மை.சூப்பர் சுப்பாராயன், விக்ரம் தர்மா, ராம்போ ராஜ்குமார் போன்ற பல திறமையான ஸ்டண்ட் மாஸ்டர்கள் இவரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ‘‘தாமரைக்குளம் டூ தலைநகரம்’’ என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
விருதுகள்
2013 ஆம் ஆண்டு ‘‘கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’’-இல் 1500க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு “கலைமாமணி விருது” வழங்கி கவுரவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ‘‘சங்கரதாஸ் ஸ்வாமிகள் விருது’’ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.