கடமலைக்குண்டு, மார்ச்.18- மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வரும் வனத்துறையைக் கண்டித்தும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின்படி பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மேகமலை வன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் மேகமலை வனப்பகுதியில் அரசரடி, இந்திரா நகர், தும்மக்குண்டு, காந்திகிராமம், வாலிப்பாறை, முருக்கோடை உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்கள் வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதியில் பீன்ஸ், இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி, எலுமிச்சை உள்ளிட்ட விவசாயங்களை செய்து வருகின்றனர். இந்த வனப்பகுதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகள் காப்பகமாக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வனத்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன் ஒரு பகுதியாக மலைக்கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்தது.
இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களாக நீதிமன்ற உத்தரவின் பேரில் மலைக்கிராம பொதுமக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நெருக்கடிகள் காரணமாக மலைக்கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள் நடத்தியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மார்ச் 18 வெள்ளிக்கிழமையன்று காலையில் கடமலைக்குண்டு கிராமத்தில் காந்தி கிராமம், வாலிப்பாறை, மஞ்சனூத்து உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக்கிராம பொதுமக்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுத்து வரும் வனத்துறையை கண்டித்தும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின்படி மலைக்கிராம பொதுமக்கள் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஎம்-விவசாயிகள் சங்கம் ஆதரவு காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டத்தில் மலைக்கிராம பொது மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. ராஜப்பன், மாவட்டச் செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் போஸ், தும்மக்குண்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னகாளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.