tamilnadu

img

பணி நிரந்தரப்படுத்தக் கோரிக்கை சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரப்படுத்தக் கோரிக்கை  சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.22-  தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் முன்பு, டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், திங்கட்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.மதியழகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்க உரையாற்றினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில், “22 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும், அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி தொடர்ச்சியுடன் நிரந்தரப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  

இதில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வீரையன், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ். மூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலத் தலைவர் காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மயிலாடுதுறை  டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம், திருப்புவனத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.  சட்டமன்ற நிதிநிலைக் கூட்டத்தொடரில், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிக்க வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமானுஜம், டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ. சிவனருட்செல்வம், மாவட்டப் பொருளாளர் பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர். வி.கண்ணன் நன்றியுரையாற்றினார்.