tamilnadu

img

சினிமா, சீரியல் பாத்தா பாஸ் ஆயிடலாமா..?? - கணேஷ்

என்னம்மா, கண்ணக் கசக்கிட்டு நிக்குற..?
ஆமா, அங்கிள்.. நைட்டு ரெண்டு படம் பாத்தேன்..
நீங்களே சொல்லுங்க, சார்.. இப்புடிப் படம் பாத்தா எப்புடிப் படிக்க முடியம்.?
சினிமா, டி.வி. பாத்தா படிக்க முடியாதுன்னு சொல்ல முடியாது..
என்னமோ போங்க, சார்... என்றவாறே வீட்டுக்குள் சென்று விட்டார்.
அங்கிள்... என்ன திடீர்னு எனக்கு ஆதரவு தந்துட்டீங்க..
உனக்குனு இல்லமா.. உண்மையத்தான் சொன்னேன்.. என்ன படம் பாத்த..?
பழைய படம்தான்.. மகான்..
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்ததையே பழசுன்னு சொல்றீங்க, நீங்கள்லாம்... அதுல யார் நடிச்சுருக்கா..
விக்ரம்
விக்ரமோட பையனும் நடிச்சுருக்காரே..
ஆமா.. துருவ் விக்ரம்..
துருவ் விக்ரத்துக்குப் படத்துல என்ன பேரு..?
ஞாபகம் இல்லையே, அங்கிள்... எதுக்குக் கேக்குறீங்க..
படத்துல அவரோட பேரு, தாதாபாய் நவுரோஜி.. படத்துல அந்தப் பெயரைக் காட்டுறப்ப ஒரு நிமிஷம் 1885ல காங்கிரஸ் உருவானது, இவரு இரண்டாவது தலைவரா இருந்தது, லண்டனுக்குக் குடியேறி அங்க தேர்தல்ல நின்னு எம்.பியாகி பிரிட்டன் நாடாளுமன்றத்துல ஆங்கிலேயர்களப் போட்டு சாத்துனது, காங்கிரஸ் உடையுற மாதிரி இருந்தப்ப இவரு பொறுப்பேத்துக்கிட்டு ஒற்றுமைப்படுத்துனதுன்னு நமக்கு ஓடணும்..
ஆஹா,, அங்கிள், இவர்தான 30 வருஷப் புள்ளிவிபரங்களைக் குடுத்து, ஆங்கிலேர்கள் நம்மள எப்புடிச் சுர்ண்டுனாங்கனு அம்பலப்படுத்துனவரு.. ஏண்டா… உங்க ஆட்சில இந்தியாவுல இவ்வளவு வறுமை இருக்கே.. உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லியானு கேட்டவரு..
அப்புடியா கேட்டாரு... 
இல்ல, அங்கிள்... படம் பாத்ததோட தாக்கம் அப்புடி..
படம் பாத்து முடிக்குறப்ப, நீ பாத்த படத்துல என்ன இருந்துச்சுனு அம்மா கூட சலிச்சுக்காம கேக்கலாம்..
நான் டி.வி. தர மாட்டேங்குறதுதான் அவங்க கோபம்.. பொம்மினு ஒரு சீரியல் பாக்குறாங்க.. அய்போ அது படு போர், அங்கிள்... 
எது இந்தக் குழந்தைத் திருமண சீரியலா..?
பரவாயில்லியே.. உங்க வீட்டுலயுமா.. சத்தமா வேற வெச்சுக்குவாங்க.. ?
ஆமா... ஆனா, அதுலயும் நெறய படிக்கலாம்..
அப்புடியா.. என்று பக்கத்து வீட்டு அம்மாவும் கண்களில் மத்தாப்போடு வெளியில் வந்தார்.
ஏம்மா.. இவ்வளவு நேரம் ஒட்டுக் கேட்டுட்டு இருந்தியா..?
சார்... நீங்க சொல்றது உண்மைதான்... உடன்கட்டை ஏறுறது, விதவைத் திருமணம்னு அந்த சீரியல்ல நெறய வருது... 
ஓ... அப்போ ராஜாராம் மோகன்ராய் நம்ம நினைவுக்கு வரணுமா, அங்கிள்... ஆனா, ஜமீன்தார் வருவாரு.. இந்தக் காலத்துக்குப் பொருத்தமில்லாத சீரியல்..
பரவாயில்ல... ஜமீன்தாரி அமைப்பு எப்ப உருவாச்சு... ஏன் உருவாச்சு.. நிலம் சிலர் கைல குவிஞ்சிருந்த காலம் அதுனு யோசிக்கலாமே..
நீங்க சொல்றதப் பாத்தா மகல்வாரி, ரயத்துவாரி முறைனு யோசிக்கச் சொல்றீங்க.. ஆனா, அம்மா வெக்குற சத்தம்தான் காதைப் பொளக்குது... ஒலி மாசுதான் இதுவும்... 
65 டெசிபல் வரைக்கும் ஒலி மாசு இல்ல.. 75க்கு மேலதான் ஒலி மாசு.. காதப் பொளக்குறது எல்லாம் 120க்கு மேல போறப்ப..
டெசிபலுக்கு dBங்குறதுதான் சின்னம்.. காது போச்சுனா, அவ்வளவுதான் அங்கிள்..
எந்த உறுப்பு போனாலும் பெரிய பாதிப்புதான்.. ஆனா, பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் உடைஞ்சு போய் உக்காந்திர மாட்டாங்க..
ஆமா, அங்கிள்... இருக்குற திறன்கள் கொஞ்சம் கூடுதலாவே இருக்கும்னு கேள்விப்பட்டுருக்கேன்..
சமீபத்துல உச்சநீதிமன்றத்துல ஒரு வழக்கு வந்துச்சு... அதுல வாதாடுன வழக்கறிஞர் சாரா சன்னி செவி மாற்றுத் திறனாளி... சைகை மொழில வாதாடிருக்காரு... அத மற்றொரு வழக்கறிஞர் விளக்கிருக்காரு... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதுக்கு அனுமதி அளிச்சதோட, முழுசாக் கேட்டுருக்காரு... சைகை மொழில வாதாடுனது இதுதான் முதல் முறை...
அம்மா குறுக்கிட்டார்.. இவ பாத்த ரெண்டாவது படம்... அதான் நேரு.. அதுல பார்வையில்லாத பொண்ணு குற்றவாளிய மண்பொம்மையா செஞ்சு அடையாளம் காட்டிருவா..
தேங்க்ஸ் அங்கிள்... இனிமே படம் பாக்குறதுக்கு சிக்கலேயில்ல...
சரிதான்.. ஆனா, எல்லாத்துக்கும் அளவு இருக்குல்ல... அளவு மாற்றம் குணமாற்றம் என்பது அறிவியல் விதியாச்சே!