tamilnadu

img

பப்புக்குரங்கின் வால்

உதயசங்கர்

பப்புக்குரங்கு ஆலமரத்தில் ஒரு கையால் கிளையைப் பிடித்துக் கொண்டு ஆடியது. பப்புக்குரங்குக்கு ஆனந்தமாக இருந்தது. ஆடும்போது வாலை நீட்டியது. வாலை ஆட்டியது. வாலை நிமிர்த்தியது. அருகில் இருந்த கிளையில் சுற்றியது. அப்படியே ஒவ்வொரு கிளையாக ஆடியது. கிளைகளில் ஆடி முடித்தது. ஊஞ்சல் ஆட்டம் ஊஞ்சல் ஆட்டம் ஊசலாடும் ஊஞ்சல் ஆட்டம் உற்சாகமான ஊஞ்சல் ஆட்டம் காலும் ஆடும் கையும் ஆடும் வாலும் ஆடும் வயிறும் ஆடும் ஊஞ்சல் ஆட்டம்  ஊஞ்சல் ஆட்டம் பப்புக் குரங்கு அருகில் இருந்த விழுதுகளைப் பிடித்துக் கொண்டது. ஒவ்வொரு விழுதாகப் பிடித்து ஆடியது. அப்படி ஆடும்போது ஒரு விழுதைப் பிடித்தது.  ஐய்யய்யோ! பாம்பு! பாம்பு!  என்று கத்தியது. பிடித்த பிடியையும் விடவில்லை. ஒரு கையில் பாம்பைப் பிடித்தபடி இன்னொரு கையால் அடுத்த விழுதுக்குத் தாவியது பப்புக்குரங்கு. என்ன ஆச்சு? அப்படியே பொத்தடீர்னு கீழே தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் பிடித்திருந்த பாம்பை விட்டு விட்டது. தரையில் புரண்டு எழுந்த பப்புக்குரங்கு வேகவேகமாகப் பாம்பைத் தேடியது.    பாம்பைக் காணவில்லை. அதற்குள் எங்கே போய் விட்டது? பப்புக்குரங்கு குழம்பியது. சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே மரத்தின் மீது ஏறியது. உஷ்! ரகசியம்!  பப்புக் குரங்கு தேடிய பாம்பு எங்கேயும் போகவில்லை. அது பப்புக் குரங்கின் உடம்பில் தான் இருக்கிறது. என்ன தெரியவில்லையா? உஷ்! பப்புக்குரங்கிடம் யாரும் சொல்லி விடாதீர்கள்!