tamilnadu

img

வற்றாத ஜீவ நதி

பொன்மலை இரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தில் குழந்தைப் பருவம் முதலே அரசியல் வாழ்க்கையை துவக்கி சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு காவல்துறை அடக்குமுறைகள், சிறைவாசத்தை சந்தித்து தொழிலாளி களின் வர்க்கப் போராட்டம், பெண்கள் உரிமைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்து, திருச்சி மாவட்டத்தின் களப்போராளியாய் வார்க்கப்பட்ட மகத்தான தலைவர் தோழர் பாப்பா உமாநாத். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது கரைபுரண்டு ஓடும் காவேரி தீரமாம் திருச்சியில் அரியமங்கலம், காட்டூர், ஆலத்தூர், கல்கண்டார் கோட்டை, குண்டூர் பஞ்சாயத்துகளிலும் ஏர்போர்ட், சுப்பிரமணியபுரம், உலகநாதபுரம் உள்ளடக்கிய பழைய பொன்மலை நகராட்சிப் பகுதிகளிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. இன்றைக்கு தண்ணீரை காசுக்கு வாங்கும் நிலை என்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் 1980 காலகட்டத்திலேயே குடிதண்ணீரை காசுக்கு வாங்கும் கொடுமை  அரங்கேறியது. தண்ணீருக்கு மக்கள் ஆலாய்ப் பறந்து பொன்மலை ரயில்வேயில் தண்ணீர் பிடிக்கச் சென்றால், ரயில்வே காவல்துறையினர் தண்ணீர் பிடிக்க வருபவர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடுவது, தண்ணீர்க் குடங்களை பிடுங்கி வைத்துக் கொள்வது என தாண்டவமாடினர்.  குடிதண்ணீருக்கு மக்கள் அரியமங்கலம் பகுதியில் பலமுறை சாலை மறியல் காவல்துறை தாக்குதல், பெண்கள் மண்டை உடைந்து இரத்தம் சொட்டிய சம்பவங்கள் என சொல்லொண்ணா துயரங்களுக்குள்ளாகினர். இந்த காலகட்டத்தில் 1987 திருவெறும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாப்பா உமாநாத் வெற்றி பெற்ற போது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் சட்டமன்றத்தில் தொடர்ந்து போராடி, வாதாடி ஒரு கட்டத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள்,

இதற்கு ஒரு தொலைநோக்குத் திட்டம் தேவை என்ற போது  விடாப்பிடியாக நின்று உடனடித் திட்டம் தேவை என்று பொன்மலை கூட்டு குடிநீர் திட்டத்தை அமலாக்க கோரினார். முதல் கட்டமாக உடனடியாக கம்பரசம்பேட்டையில் ஆழ்குழாய் அமைத்து போர்க்கால அடிப்படையில் குடிநீர்க் குழாய் அமைக்க  சென்றபோது, ரயில்வே பாதையை கடக்க தடை ஏற்பட்டு திட்டம் தடைப்பட்டு நின்றது. உடனே பாப்பா அவர்கள், தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் துணையோடு அன்றைய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெற்றார். குடிநீர்க் குழாய் அமைக்க உடனடியாக ஏழு இடங்களில் குடிநீர் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்தார். அன்றைய காலகட்டத்தில் இது ஓரளவு குடிநீர் பஞ்சத்தையும் மக்களின் தாகத்தையும் தீர்த்தது. அந்த காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அன்றைக்கு அவர் கொண்டுவந்த பொன்மலை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் அடிப்படையில் தான் இன்றைய மாநகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. திருவெறும்பூர் தொகுதியில் உள்ள மேற்கூறிய பகுதியில் குடிநீர் அருந்தும் ஒவ்வொரு மனங்களிலும் பாப்பா உமாநாத் தாகம் தீர்த்த தாரகையாக இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்களின் மனங்களில் வற்றாத ஜீவநதியாய் ஓடிக் கொண்டிருக்கிறார் தோழர் பாப்பா உமாநாத். அவரது நினைவைப் போற்றுவோம். அவர் சென்ற பாதையில் வீறு நடைபோடுவோம்.  

- கோவி. வெற்றிசெல்வன்,  சிபிஎம், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்