100 கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவு!
சென்னை, மே 3 - பொது இடங்களில் குறிப்பாக நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுவதை கருத்தில்கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர், “பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய, குறிப்பாக நகரப் பகுதிகளில், நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு நல்லதொரு மாற்றத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார். சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு, நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை அதிகளவில் மேற்கொள்ளவும், பின்வரும் நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குவது, உள்ளாட்சி அமைப்புகளில் 500 நபர்களுக்கு நாய்கள் பிடிப்பதற்கு பயிற்சிகள் வழங்குவது, தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்குவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இத்துடன், விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைப்பது, மாவட்ட அளவில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி பணிகள் துறை மற்றும் தனியார் மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சைப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள, கூடுதலாக நாய் பிடி வாகனங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், அதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.