ஓர் ஊரில் ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க தெருவில் ஒரு நாள் நடந்தாங்க. அப்போது, ஒரு கல் தடுக்கி கீழே விழ பார்த்தாங்க. அந்தப் பக்கமா ஒரு அக்காவும் தம்பியும் வந்தாங்க. அந்தப் பாட்டி கீழே விழும்போது, அக்கா தாங்கிப் பிடித்தாள். அப்போது, அவளது தம்பி அவளைக் கடிந்தான் . “பாட்டி தானே, செத்தா சாகட்டும் . அவங்கள பிடிக்கிறேன்னு நீ கீழே விழுந்தா, உன்னை யார் பார்க்கிறது” என்றான். அதற்கு அக்காள், “ பெரியவங்கள அப்படி எல்லாம் பேசக்கூடாது.” எனக் கூறினாள் . “அவங்கள பாரு! தோல் எல்லாம் சுருங்கி கூன் விழுந்து அசிங்கமா இருக்காங்க.” என்றான். அவள் , “ நமக்கும் வயசாகும். நம்ம தோலும் சுருங்கும்.” என்றாள். சில வாரங்கள் சென்றபின் அக்காவும் தம்பியும் விடுமுறைக்குப் பெரியப்பா வீட்டிற்கு பேருந்தில் சென்றனர். அதே பேருந்தில் அந்தப் பாட்டியும் அமர்ந்திருந்தார். காற்று வேகமாக வீசியது. பாட்டி பேருந்தில் உறங்கினாள். அதனால், அவளது நிறுத்தத்தில் அவள் இறங்கவில்லை. திடீரென்று முழிப்பு தட்டவே, நடத்தினரிடம் தான் இறங்க வேண்டிய இடம் குறித்து விசாரித்தார். நடத்துனர் ஒரு கிலோமீட்டர் தாண்டி வந்து விட்டீர்கள் என்றார். “வரும் நிறுத்தத்தில் இறங்கி செல்லுங்க” என்று கூறினார். அந்த நிறுத்தத்தில் அக்காவும் தம்பியும் இறங்கினார்கள். அக்கா பாட்டியை பார்த்து புன்முறுவல் செய்தாள். பாட்டி பதிலுக்கு புன்னகைத்தார். பாட்டி சுற்றி பார்த்தார். ஆட்டோ எதுவும் இல்லை.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எவரையும் காணவில்லை. என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அக்கா பாட்டி அருகில் சென்றாள். “ பாட்டி கவலைப்படாதீங்க! என்னுடைய பெரியப்பா எங்களை அழைத்துச் செல்ல வருகிறார். நீங்கள் அவரது வண்டியில் ஏறி உங்கள் ஊருக்கு செல்லுங்கள். அதன்பின் நாங்கள் பெரியப்பா வீட்டிற்கு செல்கிறோம்.” என்றாள். பாட்டி தலை ஆட்டினாள். பெரியப்பா வந்தவுடன் விபரம் தெரிவித்தாள். பாட்டியை பத்திரமாக அவளது ஊருக்கு அனுப்பி வைத்தாள். தம்பி அவளுடன் சண்டைக்கு போனான். “நாம் வீட்டுக்கு முதலில் போயிருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து தின்னுகிட்டு படுத்து தூங்கிட்டு இருக்காம தேவையில்லாம இந்த பாட்டி அலைவதற்கு, பேசாம செத்து தொலையலாம்” என்றான். அக்கா அவனுடன் சண்டைக்கு போனாள். நமக்கும் வயசாகும் நாமும் ஒரு நாள் பாட்டியா ஆவோம். நாமும் இப்படி ஒரு நாள் தூங்கி விடலாம். “ என்றாள். ஒரு மாதம் கடந்தது. இருவரும் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றார்கள். எப்போதும் பள்ளி முடிந்து இருவரும் ஒன்றாக வீடு திரும்புவார்கள்.
ஒரு நாள் தம்பிக்கு சிறப்பு வகுப்பு இருந்தது . ஆகவே, அவன் தனியாக மிதிவண்டியில் வீட்டிற்கு வர தொடங்கினான். நெடுஞ்சாலை என்பதால் பேருந்துகள் விரைந்து சென்றன. நேரம் ஆகியது. ஆகவே, அவன் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான். அவன் வேகமாக மிதிக்கத் தொடங்கினான். ஒரு திருப்பத்தில் எதிரில் வந்த இருசக்கர வாகனம் அவன் மீது மோதியது. அவன் தூக்கி எறியப்பட்டான். அவனது சைக்கிளின் சக்கரம் வளைந்து போனது. அவன் கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. ரத்தம் வடிந்தது. உதவிக்கு எவருமில்லை. பைக்கில் வந்தவன் எந்த முதலுதவியும் செய்யாமல் சென்று விட்டான். அப்போது , அந்த வழியாக பாட்டி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அடிபட்டு கிடக்கும் அவனைப் பார்த்தார். அவனை ஆட்டோவில் ஏற்றினார். அவனது சைக்கிளையும் ஏற்றினார். மருத்துவமனையில் அவனைச் சேர்த்தார். அதன் பின் அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார். இரண்டு நாட்கள் கழித்து பாட்டி அவனது வீட்டிற்கு வந்தார். அவனது சைக்கிளை சரி செய்து கொண்டு வந்திருந்தார். பாட்டியை கண்டதும் தம்பி வேகமாக நடந்தான். அவனால் நடக்க முடியவில்லை. வாசல் அருகில் சென்று வாய் நிறைய ‘வாங்க பாட்டி ! உள்ளே வாங்க!’ என்றான் அவளது அக்கா அவனைப் பார்த்து சிரித்தாள்.