சென்னை, ஜூலை 16 - வனவிலங்குகளால் பயிர்ச் சேதம் பாதிப்புக்களுக்கு உள்ளாகும் விவசாயிகளை உரிய முறையில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் யானை, காட்டுப்பன்றி, குரங்கு, மான், மயில், காட்டெருமை ஆகிய வனவிலங்குகளால் வேளாண் பயிர்கள் அழிக்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் பாதிப்பு மிகக் கூடுதலாக இருக்கிறது. இந்நிலையில், பயிர் அழிவுக்கு வனத்துறை யால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை பாதிப்பை ஈடு செய்யும் வகையில் இல்லை என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். வனவிலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர்ப் பாதிப்புக்கு காப்பீடு வழங்க பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய பிரீமியம் தொகை, எவ்வகையான பயிர், எந்தெந்த விலங்குகளால் போன்றவற்றை மாநில அரசு குறிப்பிட்டு அறிவிக்க வேண்டி யுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ப் பாதிப்புகளுக்கு பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ப் பாதிப்புகளுக்கு வனத்துறையினரால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை பயிர்களின் பாதிப்புக்கேற்ப இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கிட தேவையான நடவடிக்கை கள் எடுத்து விவசாயிகளை பாதுகாத்திட முன்வருமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.