tamilnadu

img

ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் நூறாவது நாள் தொடர் போராட்டம்!

கும்பகோணம், மார்ச் 9 - நூறு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நடைபயண பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகைமாலி, மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர். திருமண்டங்குடி திரு ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. விவசாயிகளுக்கு கரும்பு பணப் பாக்கியை தராமல், விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ரூ.200 கோடி ரூபாய் கடனை வாங்கி ஆரூரான் ஆலை நிர்வாகமே எடுத்துக் கொண்டு மோசடி செய்தது. அத்துடன் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடனுக்கு ஆரூரான் ஆலை கரும்பு பணத்தில் பிடித்தம் செய்து எடுத்துக் கொண்டு வங்கிகளுக்கு செலுத்தாமலும் மோசடி செய்தது. இந்நிலையில் கால்ஸ் டிஸ்லரி என்கின்ற தனியார் நிறுவனத்திற்கு ஆலையை விற்பனை செய்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் திருமண்டங்குடி ஆரூரான் ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் 100 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு குறிப்பிடும் படியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கரும்பு விவசாயிகளுக்கு நீதி கிடைத்திட வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டத்தின் 100ஆவது நாளான வியாழனன்று காலைவிவசாயிகள் நடை பயண பேரணி நடந்தது. பேரணி மருத்துவக் குடியிலிருந்து புறப்பட்டு ஆதனூர், நாகக்குடி, கல்விக்குடி, கூனஞ்சேரி வழியாக  ஆலையை சென்றடைந்தது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று திருமண்டங்குடி ஆரூரான் ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து  தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர்நாகை மாலி, துவக்கிவைத்து கண்டன உரையாற்றினார்.  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தங்க காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர்   எம்.பழனிஅய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், செயற்குழு உறுப்பினர் அருளரசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வாசு, மாநில குழு உறுப்பினர் சி.நாகராஜன், மறுமலர்ச்சி திராவிட கழக விவசாய அணி ஆடுதுறை முருகன் ஸ்டாலின் மாதர் சங்க மாநில நிர்வாகி கலைச்செல்வி  ஆரூரன் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க நாக.முருகேசன், செந்தில்குமார் நாராயணசாமி, என்.கணேசன்,  எஸ்.கோவிந்தராஜ், பி.மோகன் தாஸ், வி.ஆர்.கே.செந்தில்குமார், ஏ.கொளஞ்சியப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.