tamilnadu

திரும்பிய திசையெல்லாம் சிவக்கட்டும் மதுரை

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், இடதுசாரி இயக்க வரலாற்றிலும் தனித்துவமான இடம்பெற்ற மாமதுரையில், இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு 2025 ஏப்ரலில் நடைபெற உள்ளது.  மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி, முதன்முதலில் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டபோது மதுரைக்கு வந்தார். அவனியாபுரம் பெருங்குடி பகுதியில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர், “இந்தியாவின் புரட்சிகர மையங்களில் ஒன்றாக மதுரை விளங்குகிறது” என்று பெருமையுடன் குறிப்பிட்டார். இத்தகைய புரட்சிகர பாரம்பரியம் கொண்ட மதுரையில், அவரது பெயரில் அமைகிற நினைவரங்கத்தில் அகில இந்திய மாநாடு நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இம்மாநாட்டை பேரெழுச்சியுடன், பிரம்மாண்டமாக நடத்திட, அக்டோபர் 22 அன்று மதுரையில் நடைபெற்ற வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தோழர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

சீத்தாராம் யெச்சூரி நினைவுகளுடன்...

இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையில் முக்கியமான கருத்துகளை முன்வைத்தார். “கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில், நமது அன்புக்குரிய தலைவர் யெச்சூரி தமிழகத் தலைவர்களை அழைத்து மாநாட்டை நடத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். அவரே நடுநாயகமாக இருந்து இம்மாநாட்டை நடத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த மாதம் அவர் நம்மை விட்டுப் பிரிந்த துயரச் செய்தி நம்மைப் பெரிதும் பாதித்தது” என்று உருக்கமாகப் பேசினார்.

எதிர்கொள்ளும் சவால்கள்

தற்போதைய நாட்டின் நிலை குறித்து அவர் பேசுகையில், “கம்யூனிஸ்ட் இயக்கமும் நாடும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. மக்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் நிலவுகிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் இந்திய மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பாஜக ஆட்சி, மறுபுறம் மத, சாதிய சக்திகளைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தும் செயல்கள் நடைபெறுகின்றன” என்றார். பாலஸ்தீனப் பிரச்சனை குறித்தும் அவர் பேசினார். “இஸ்ரேல் தாக்குதலில் ஒரு லட்சம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70 சதவீதம் பெண்கள். இஸ்ரேலை உலக நாடுகள் கண்டிக்கும் நிலையில், மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது” என்று சாடினார். நாட்டின் மதச்சார்பற்ற தன்மை குறித்து பேசிய அவர், “பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சேர்ந்து வாழும் நாடு நமது இந்தியா. ஒரே குடும்பத்தில் பல மதத்தினர் வாழ்வது நம் நாட்டின் தனிச்சிறப்பு. ஆனால் இன்று ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் தொடர்ச்சியாகத் தாக்கப்படுகிறார்கள்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். ஆணி வேரை  அறுக்க வேண்டும் “சோசலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் முன்னேற வேண்டுமானால், ஆர்எஸ்எஸ்ஸின் ஆணிவேரை அறுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் கருத்தியல் நீடிக்கும் வரை வர்க்க ஒற்றுமையோ, மக்கள் ஒற்றுமையோ கிளர்ந்தெழாது. எனவே ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வேரை அறுத்து, நாட்டை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற வேண்டிய முக்கியமான பணி நம் முன் உள்ளது” என்றும் கூறினார். 

தமிழ்நாட்டின் பெருமை

கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். “பல முற்போக்குச் சிந்தனையாளர்கள் வாழ்ந்த நம் தமிழ்நாட்டில் பாஜக படிப்படியாக காலூன்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மதவெறி சக்திகளை அகற்ற, மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது. இந்தியா கூட்டணியின் மூலம் பாஜகவை தனிப்பெரும்பான்மை பெற விடாமல் தடுத்தது ஒரு மகத்தான சாதனை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கம்பீரமாக அமரும் நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி விட முடியாத அளவுக்கு பாஜகவை பின்னுக்குத் தள்ளியுள்ளோம். இந்தியா கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

5 வது முறையாக  தமிழ்நாட்டில் மாநாடு

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டு வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், “மூன்றாவது முறையாக கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. ஐந்து முறை கட்சியின் அகில இந்திய மாநாட்டை நடத்திய பெருமை தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளது. 1953-ல் மதுரையில் நடந்த மாநாட்டுக்கு அன்றைய பொதுச் செயலாளர் அஜாய் குமார் கோஷ் வந்தபோது, வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர். இதனால் 2 மணி நேரம் ரயில் தாமதமாக வந்தது. மதுரை ரயில் நிலையத்தில் மட்டும் இருபதாயிரம் பேர் திரண்டு வரவேற்றனர்” என்று வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய அவர், “நமது அரசியல் கடமையைத் தீர்மானிக்கும், தமிழ்நாட்டில் செங்கொடி இயக்கத்தை வளர்த்து அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் மாநாடாக இது அமையும். தமிழகம் முழுவதும் - மாவட்டங்கள், கிராமங்கள், வீதிகள், வீடுகள் தோறும் மாநாட்டுச் செய்தியை நமது தோழர்கள் கொண்டுசெல்ல வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். இந்தியா முழுவதிலுமிருந்து தலைவர்களும் களப்போராளிகளும் மதுரைக்கு வரப்போகிறார்கள்” என்று உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு  தோழருக்கும் பொறுப்பு

“பாஜகவை அரசியல்-தத்துவார்த்தக் களத்தில் தோற்கடித்து அகற்ற வேண்டும். சாதியற்ற சமத்துவ சமூகத்தை அமைக்க வேண்டிய மகத்தான கடமை நம் முன் உள்ளது. மாநாட்டைச் சிறப்பாக நடத்த ஒவ்வொரு தோழருக்கும் பொறுப்புள்ளது. தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள், கலைக்குழு நிகழ்ச்சிகள், கலை விழாக்கள் மூலம் மாநாட்டுச் செய்தியைப் பரப்பவிருக்கிறோம். தமிழகமும் இந்தியாவும் கொண்டாடும் வகையில் இந்த மாநாட்டை நடத்துவோம்” என்று உறுதியுடன் தமது உரையை நிறைவு செய்தார்.