tamilnadu

img

சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் மேலும் ஒருவர் பலி? டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 8- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் தாக்கியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் எனது இளைய மகன் மகேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 2 நாள் சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாகத் தாக்கினர். இதில் மகேந்திரனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. சுயநினைவு இழந்த நிலையில் மே 24-ல் மகேந்திரனை வெளியே அனுப்பினர். வீட்டிற்கு வந்ததும் உடல் நிலை மோசமடையவே மகேந்திரனை மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஜூன் 13-ல் என் இளைய மகன் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக புகார் அளித்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் மகன் துரையை விடுவிக்க மாட்டோம் என போலீஸார் மிரட்டினர். இதனால் உடனடியாக புகார் அளிக்கவில்லை. இச்சூழலில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மகேந்திரன் இறப்பு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் புகார் தொடர்பாக விசாரணை நடத்தவும், எங்கள் குடும்பத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி, தூத்துக்குடி ஆட்சியர், எஸ்பி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது. ஏற்கனவே தந்தை - மகன் வழக்கில் காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.