திருச்சிராப்பள்ளி,நவ.17- புதுமைப்பெண்கள் திட்டத்தில் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 27 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். திருச்சியில் டிரஸ்ட் ஒன்றின் சார்பில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “பிரிட்டிஷார் காலத்தில் ஒரு பெண் கூட பள்ளிக்கு செல்லவில்லை, ஆண்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். குறிப்பாக இந்தியாவில் 35.7 சதவீதம் மாணாக்கர் உயர்கல்வி பயிலும் நிலையில், 16.7 சதவீதம் பேர் பெண்கள் என்பது தற்போது பெருமைக்குரியதாக உள்ளது. மாணவர்களை காட்டிலும் மாணவிகளை அதிகம் கல்வி பயில்கின்றனர். அதே நேரம் மாணவர்களும் நன்கு கல்வி பயில வேண்டும். ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். அதேபோன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளிலும் பெண்களே முதலில் வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு புதுமைப்பெண்கள் திட்டத்தில் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்மூலம், கல்லூரி சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 27 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் அறக்கட்டளைகள் மூலம் வழங்கப்படும் இது போன்ற வாய்ப்புகளை மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்,” என்று தெரிவித்தார்.