புதுக்கோட்டை, மார்ச் 10- சங்க இலக்கியத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை அனைத்தும் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது என பேராசிரியர் அருணன் கூறியுள்ளார். தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ எனும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர்.கவிதா சுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசினார். ‘கலைகள் போற்றிய தமிழ்நாடு’ எனும் தலைப்பில் பேராசிரியர் கி.பார்த்திபராஜா பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணன் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ எனும் தலைப்பில் பேசுகையில், ‘‘செம்மொழியான தமிழ்மொழி 8 கோடி பேர் பேசும் மக்கள் மொழியாக உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக உள்ள மொழி தமிழ் மொழி. இந்தியாவில் சுமார் 1 லட்சம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 57 ஆயிரம் தமிழ் மொழி கல்வெட்டுகளாகும். சங்க இலக்கியத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை அனைத்தும் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது. பாரதியார், கண்ணதாசன் ஆகியோரின் கவிதைகளை இளைஞர்கள் படிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பொறியியல் படிப்பினை தமிழ் வழியில் கொண்டு வந்துள்ளது சிறப்பானதாகும்’’ என்றார்.