tamilnadu

img

இயற்கை தந்த பழங்கள் - புலிகரம்பலூர் பொன்னையன்

இயற்கை தந்த பழங்கள் எல்லாம்
     எடுத்துத் தின்றால் இனிக்கும் வாழ்வு!
செயற்கை  யானது எல்லாம் தின்றால்
     தேடும் நோய்கள்;தந்திடும் தாழ்வு!

காட்டில் பழுக்கும் இலந்தைப் பழங்கள்
      களாவின் கனிகள் கற்கண் டாகும்!
வீட்டில் மாதுளை கொய்யா பப்பாளி
     விருந்து வைத்தால் விருப்ப  மாகும்!

நாவற் பழங்கள் நாவிற் வைத்தால்
      நடுங்கி ஓடும் சர்க்கரை நோயே!
கோவைப் பழமும் சுக்கம் பழமும்
     கூடுதல் சுவையைக் கொடுக்கும் தாயே!

ஈச்ச மரங்கள் உதிர்க்கும் பழங்கள்
     இனிக்கும் காரை சூரைக் கனிகள் 
காய்த்த  ஆணா நுணாவின் பழங்கள்
   கடித்தால் போக்கும் உடலின் பிணிகள்!

வாழை மாவின் பலாவின் பழங்கள்
   வைத்தால்  வாயில்   அமிழ்தம்  ஊறும் !
தோழனாய்க் கொடுக்காப் புளியைக் கொண்டால்
தோன்றும் இளமைத் துள்ளல் சேரும்!