tamilnadu

img

பொருளாதாரத் தடையால் கியூபாவின் மனிதத்தன்மையை குலைக்க முடியவில்லை

சென்னை, ஜன. 17 - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார தடையால் கியூபாவின் மகிழ்ச்சியையும், மனிதத் தன்மையையும் குலைக்க முடியவில்லை என்று அலெய்டா குவேரா தெரிவித்தார். புரட்சியாளர் சேகுவேரா மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேரா.எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு செவ்வாயன்று (ஜன.17) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில்  வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “சே’ என்கிற ஒரு வார்த்தை சாதாரண மனிதர்களையும் சுண்டி இழுக்கக் கூடியதாக உள்ளது. தன்னை ஒரு நாட்டிற்குள் சுருக்கிக் கொள்ளாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடமெல்லாம் சென்று போராடுவதுதான் தோழமை என்ற உணர்வோடு தோழர் சேகுவேரா தனது வாழ்வை அமைத்துக் கொண்டதே அதற்கு காரணம். அத்தகைய புரட்சி நாயகன் குடும்பத்தை சேர்ந்த, கியூப நாட்டின் பிரதிநிதியாக அலெய்டா குவேராவை வரவேற்கிறோம்” என்றார்.

கியூபா 60 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, கடும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறது. ஒரு சில ஆண்டுகள் தடை விதித்தாலே ஒரு நாடு அழிந்துவிடும். ஆனால், தடைகளுக்கு அடிபணியாமல்  ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிமிர்ந்த தோளோடு கியூபா போராடி வருகிறது.  கியூபா சோசலிச நாடு என்ற காரணத்தினால்தான் அது சாத்தியமாகிறது. 130 கோடி மக்களை கொண்ட இந்தியாவின் ஆளும் அரசு, அமெரிக்காவிடம் சரணாகதி அடைகிறது. அணிசேரா கொள்கையை கூட கைவிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், 1.50 கோடி மக்களை கொண்ட சிறிய கியூபா, சோசலிசத்திற்காக போராடுகிற நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது” என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். “சேகுவேரா மகள் என்பதற்காக மட்டும் தோழர் அலெய்டாவை வரவேற்கவில்லை. உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில், உணர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் வகையில் வரவேற்கிறோம். அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் கியூபா போர்ப்படைத் தளபதியாக திகழ்கிறது. அந்த போராட்டத்தில் கியூபா வெல்லும்” என்றும் அவர் கூறினார்.

அலெய்டா குவேரா

இந்நிகழ்வில் அலெய்டா குவேரா ஏற்புரையாற்றி பேசியதன் சுருக்கம் வருமாறு:  கியூபா ஒரு சிறிய நாடுதான். கேரள மாநிலத்தின் அளவில் மூன்றில் ஒரு பகுதிதான் எங்கள் நாட்டின் அளவு. ஏகாதிபத்திய அமெரிக்காவிடம் இருந்து வெறும் தொண்ணுறு மைல் தொலைவில்தான் கியூபா உள்து. கியூபா மீதான ஏகாதிபத்தியத்தின் தடைகள் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மருத்துவர் என்கிற வகையில் அமெரிக்காவின் தடைகளால் ஏற்படும் கடும் விளைவுகளை நேரடியாகவே அறிவேன். மருத்துவத் தேவைகளுக்காக நாங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய மருந்துகள் பலவற்றுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. நாங்கள் இறக்குமதி செய்யும் மருந்துகளில் 80 விழுக்காடு மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடியாமல், பல கைகளை மாற்றி இறக்குமதி செய்கிறோம். இதன் விளைவாக கூடுதல் விலை கொடுத்தே மருந்துகளை வாங்குகிறோம். பல இடர்பாடுகளை உருவாக்கி கியூபாவை முடக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்றாலும் அதனால் எங்களின் மகிழ்ச்சியையும், மனிதம் நிறைந்த பங்களிப்பையும் குலைக்க முடியவில்லை. நான் என்கிற தனித்த சிந்தனைகளை கடந்து நாம் என்கிற சிந்தனையே அதை சாத்தியப்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவிற்கோ, பிரிட்டனுக்கோ, சுவிட்சர்லாந்திற்கோ செல்லவில்லை. மாறாக கியூபாவிடம்தான் வந்தது. இவ்வளவு நெருக்கடிக்கு இடையிலும் கொரோனாவை தடுக்கும் ஐந்து தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளோம். அதற்கு காரணம், பலரின் உயிர் தியாகத்துடன், சோசலிசத்தின் மீதான பற்றுறுதியுடன் கியூபா செயலாற்றுவதுதான்.   கியூபாவில் இன்றைய இளைய தலைமுறையினரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது. நாங்கள் ராணுவ பள்ளியில் பயின்றோம். வேலைக்கு சென்றபோது ஒரு வாரம் முழுவதும் பணியிடத்தில் தங்கி வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இன்று நிலவரம் அவ்வாறாக இல்லை. பல்வேறு மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, எனது மூத்த மகள் படித்து முடித்துவிட்டு ஹவானா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இன்றைய பெற்றோர்கள், தமக்கு கிடைக்காதது தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் உள்ளனர். சமூக நோக்கை உள்ளடக்கி இந்த எதிர்பார்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நெருக்கடிகளை கடந்து நாம் பலவற்றை சாதித்த போதும் அதைக்கொண்டு மட்டும் நாம் திருப்தி அடைந்துவிட முடியாது. இளம் தலைமுறையினரிடம் சமூக நோக்கை அதிகப்படுத்திட வேண்டும். கியூபாவில் கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியிலும், மக்களை காக்கும் பணியிலும் இளைஞர்கள் கூடுதலாக பங்காற்றினர். அவர்களின் புதிய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.  “வெற்றி பெறும் வரை போராடுவோம்” எனும் சேவின் வரியே இந்த புதிய சூழலை எதிர்கொண்டு வெல்லவும் எமக்கு பலம் தருகிறது.   இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்விற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார், பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.