ஈரோடு, பிப். 15- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் உரையாற்றுகையில் கூறியதாவது: இந்தியாவின் இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாடு என்ன நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவேன் என்று ஆளுநர் ரவி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி வாயைத் திறக்கவில்லை. எனவே அவர்களுக்கு அளிக்கிற வாக்கு தமிழ்நாட்டிற்கு எதிரானவர்களுக்கு அளிக்கிற வாக்கு.
குழாய் மூலம் குடிநீர் அளிக்கும் திட்டத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய தந்தை பெரியாரின் மண் ஈரோடு. உத்தரப்பிரதேசத்தில் இப்போதுதான் குழாய் பதித்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல நிர்வாகம் எப்படி நடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது ஈரோடு மாநகரம். ஆனால் இப்போதுதான் ஊருக்கு பைப்பும், லைட்டும் போட்டுக் கொண்டுள்ள மோடியும், பாஜகவும் நிர்வாகத்தைப் பற்றி நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். மோடி சொல்வதற்கெல்லாம் அதிமுக வாயை மூடிக்கொண்டு தலையாட்டுகிறது. பிபிசி ஒரு ஆவணப்படம் வெளியிட்டால் அதன்மீது வருமான வரித்துறையை ஏவிவிடுகிறார் மோடி. ஆனால் அதானிக்கும், அம்பானிக்கும் என்னவெல்லாம் வேண்டுமோ, அதற்காக சட்டத்தைக் கூட வளைக்கிறார். உடன்கட்டை ஏறுவதை புனிதமானது என்று பாஜக எம்பி நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தப்பு செய்தவன் அரசனேயானாலும், மன்னனேயானாலும் ஊரையே கொளுத்துவேன் என்ற கண்ணகி வாழ்ந்த நிலம் தமிழ்நாடு. பெண்களின் உரிமை, சமத்துவம், சுயமரியாதைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டிய மாநிலமாக தமிழ்நாடு இருந்தது, இருக்கிறது. அந்த பாரம்பரியம் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் டி.எம்.எஸ்.செல்வகணபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், நகர செயலாளர் பி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.