tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தீரமிக்க செயல்பாடுகள் - எஸ்.ஏ.பெருமாள்

கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரும்பாடுபட்டு வருகிறது. தீண்டாமைக்கெதிராக பல சட்டங்கள் இருப்பினும் அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பட்டியலின மக்கள் அனுபவிக்க முடியவில்லை. இதற்கு காரணம் சட்டங்களை அமல்படுத்தும் அதிகார வர்க்கம் சாதிவெறியோடு இயங்குவதுதான். இந்த அதிகார வர்க்கத்தை இயக்கும் ஆளும் வர்க்கமும் அரசுகளும் அதே சாதிய ஒடுக்குமுறைகளை ஆதரித்து நிற்கின்றன.

தொழில் அடிப்படையாக உருவான சாதிகளை பிராமணீயம் தனது மனுஸ்மிருதி வர்ணாசிரமத்தினால் நிலைக்க வைத்தது. உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளி மக்களை தீண்டத்தகாதவர்கள் ஆக்கியது. அதை இன்னும் கொடூரமாக மாற்றுவதில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் வேடமான பாஜகவும் மோடி ஆட்சி மூலம் முயற்சிக்கிறார்கள்.  தமிழகத்தில் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணிச்சல்மிக்க செயல்பாடுகள், சாதனைகள் பீகாரில் அண்மையில் பெகுசராயில் நடந்த அகில இந்திய மாநாட்டில் பாராட்டுப் பெற்றுள்ளன. இந்நிலையில் சென்னையில் 4, 5 தேதிகளில் நடந்த நாலாவது மாநாடு இன்னும் வீரியமாய் செயல்பட சபதமேற்றுள்ளது.

“இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
இருக்குதென்பானும்
இருக்கின்றானே” -என்றார் பாரதிதாசன்.
 

தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஆதரித்து 42 தோழமை அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு நேரில் வந்திருந்து வாழ்த்தினர். கடந்த மாநாட்டுக்குப் பின்பு நாலாண்டுகளில் இம்முன்னணி ஏராளமான போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டுள்ளது. தலித் சமூகங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தலித் மக்களோடு புதிரை வண்ணார்கள், பழங்குடிகள் போன்ற ஒதுக்கப்பட்ட மக்களுக்காகவும் நிற்பது என்றும் வலியுறுத்தப்பட்டது. சாதிப்பிரச்சனைகளும் வர்க்கப் பிரிவினை தான் என்ற நமது பார்வை என்பது வலியுறுத்தப்பட்டது. திமுக ஆட்சியில்தான் மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் இடித்து தகர்க்கப்பட்டது. பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. அருந்ததிய மக்களுக்கு மூன்று சத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடந்த நற்செயல்களாகும். தற்போது அவரது புதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் தீண்டாமைச் சுவர்கள் இடிக்கப்படுகின்றன. ஆலயப்பிரவேசங்களும் தொடர்கின்றன. இன்னும் மலக்குழி மரணங்களையும், ஆணவப் படுகொலைகளையும் தமிழக முதல்வர் ஒழித்துக் கட்ட முன்வர வேண்டும்.