சென்னை, மே 8- தொழிற்சங்க இயக்கத்தின் அடை யாளமாக திகழ்ந்தவர் தோழர் வி.பி. சிந்தன் என சென்னையில் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் தெரிவித்தார். தோழர் வி.பி.சிந்தன் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிஐடியு வடசென்னை, மத்திய சென்னை மாவட்டக் குழுக்கள், அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலை மையில் ஞாயிறன்று (மே 8) நடை பெற்றது. முன்னதாக சென்னை ஓட்டேரி ஏ.பி.நினைவகத்தில் இருந்து பேரணியாகச் சென்று அவரது நினைவிடத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் எஸ்.கே. மகேந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் ஆகியோர் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அ. சவுந்தர ராசன் பேசுகையில், “தமிழகத்திலும், குறிப்பாக தலைநகர் சென்னையிலும் வர்க்க ஸ்தாபனங்களையும், தொழிற்சங்க இயக்கத்தையும் வலுப்படுத்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார். 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி மாறிய பிறகு ஏராளமான தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்கள் ஊதிய உயர்வுக்காக நடைபெற்றவை அல்ல. சங்க அமைக்க உரிமை கோரும் போராட்ட மாகும். இன்றைக்கு `ஹூண்டாய், யமகா என பல்வேறு நிறுவனங்களில் நடைபெற்ற போராட்டங்களும் சங்க அமைக்க உரிமை கோரும் போராட்டங் களே ஆகும் என்றும் அவர் கூறினார். தொழிற்சங்கங்களை தனது கையில் வைத்துக் கொண்டு முத லாளிகள் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் வி.பி.சிந்தன். அத்தகைய போராட்டங்களை கூட்டு இயக்கமாக மாற்றி வெற்றி கண்டவரும் தோழர் வி.பி.சிந்தன் என்றும்; எந்த கட்சித் தலைவராலும் அவரது பணியை புறக்கணிக்க முடிய வில்லை. கத்திக்குத்துக்கும் ஆளானார். பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின்றி ஒரு வருடம் சிறையில் அடைத்தனர் என்றும் தெரிவித்தார்.
தொழிற்சங்க இயக்கத்தின் அடையாளமாக, முகமாகத் திகழ்ந்த அவர் மேற்கொண்ட கூட்டு இயக்கம் என்பதை நாம் வலுவாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் சவுந்தரராசன் கூறினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், அரசு ஊழியர் சம்மேளன மாநில பொருளாளர் வி.சசிகுமார், மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் பாலாஜி, சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் வி.குப்புசாமி, மத்திய சென்னை மாவட்டப் பொருளாளர் சந்தானம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.