ஆய்வுக் கட்டுரைகளின் சாராம்சங்களை அறிய எளிய நடை பாட்காஸ்ட்
மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி
திருவாரூர், ஜுன் 12- திருவாரூர் அருகே, நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், கல்வி மற்றும் ஆராய்ச்சியை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளின் சாராம்சத்தை, செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் எளிய, உரையாடல் வடிவிலான பாட்காஸ்ட்களாக மாற்றியுள்ளது. இந்த புதிய முயற்சி கல்வியாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆராய்ச்சிகளின் பலன்களை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும். பேராசிரியர்களின், ஆய்வுக் கட்டுரைகளின் முக்கிய பகுதிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பாட்காஸ்ட் ஆடியோக்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாட்காஸ்ட்கள், ஆய்வுத் தகவல்களை எளிய உரையாடல் நடையில் விளக்குவதால், துறை சார்ந்த வல்லுநர்கள் அல்லாதவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். பொதுமக்கள், தங்கள் விருப்பமான மொழியில் இந்த பாட்காஸ்ட்களைப் பதிவிறக்கம் செய்து, கேட்டு பயன்பெறலாம். இது கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய முயற்சி, தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை கடைபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, பல்கலைக்கழகம் மற்றொரு புதிய முயற்சியையும் தொடங்கியுள்ளது. பேராசிரியர்களின் குழுவால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் மதிப்பீடு செய்து, ஒவ்வொரு துறையிலும் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முன்னோடியாக, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை மற்றும் உயிரி தொழில்நுட்பம் துறை பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தங்கள் பாடத்திட்டங்களை மதிப்பீடு செய்து, மாற்றி அமைத்து, சிறந்த பாடத்திட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த திட்டம் இனிவரும் காலங்களில் மற்ற துறைகளிலும் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.