மதுரை, ஜன. 27 - மதுரை மாவட்டம் வல்லாளபட்டியில் ஞாயிறன்று (26.01.2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். டங்ஸ்டன் சுரங்க உரிமத்திற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் தனது உரையில், “டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் மூன்றே மாதங்களில் வெற்றி பெற்றது. இது சாதாரண வெற்றி அல்ல, மாபெரும் வெற்றி. மக்களின் உறுதியான எதிர்ப்பும், தமிழக அரசின் கடுமையான நிலைப்பாடும் இதற்கு காரணம்” என்று தெரிவித்தார்
மேலும், “23.11.2024 அன்று அரிட்டாப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 29.11.2024 அன்று மேலூரில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதே நாளில் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். 9.12.2024 அன்று சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தேன்” என்று குறிப்பிட்டார். “நான் இருக்கின்ற வரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு சூழல் வந்தால் முதலமைச்சராக நான் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் உறுதியளித்தேன். சட்டமன்றத் தீர்மானத்தையும், மக்களின் உறுதியான போராட்டத்தையும் மதித்து, ஒன்றிய அரசு இப்போது இந்த ஏல அறிவிப்பை இரத்து செய்துள்ளது” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்..