tamilnadu

img

வஉசியின் போராட்டக் கதையைச் சொல்லும் வரலாற்றுப் பதிவு - பேரா.வ.பொன்னுராஜ்

“ஆவணப் பதிவுகளை மீளக்  கொணர்வதிலும், வர லாற்றை இயம்புவதிலும் ஓர் உடைப்பை  ஏற்படுத்தி இருக்கிறது” என்று ‘சுதேசி கப்பல்’ என்ற நூல் குறித்துப் புகழாரம் சூட்டுகிறார்” வரலாற்றாசிரியர் கோபால கிருஷ்ண காந்தி. ‘சுதேசி கப்பல்’, “சலபதியின் நாற்பதாண்டு கால உழைப்பின் விளைச்சல்’ என்கிறார், எழுத்தாளர் பெருமாள்முருகன். தனக்கெதிரான அரசியல் பழிவாங்கும் புயலையும், நிலைகுலைய வைக்க வல்ல பொருளாதாரத் தடைகளையும்  கண்டு “அஞ்சேன் சோர்ந்திலேன்” என்று சொன்ன கப்பலோட்டியத் தமிழன் வ உ சி, அவற்றை எவ்வாறு எதிர்  கொண்டார் என்ற கதையை நெகிழ வைக்கும், மறக்கவியலாத எழுத்துக் களில் (ஆங்கில) படைத்திருக்கிறார், ஆ. இரா. வேங்கடாசலபதி. சுதேசி கப்பல் கம்பெனி உருவாவ தற்கான இந்திய விடுதலை அரசியல் பின்புலத்தை விவரிப்பதோடு கதை தொடங்குகிறது. ஆம்! இந்த வரலாற்றுப்  புத்தகத்தை வாசிக்கும் பொழுது தொடக்கம் முதல் இறுதி வரை  ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு தான் இருக்கிறது என்று  சொன்னால் அது வெறும் புகழ்ச்சி யல்ல, உண்மை.  ஆங்கில ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதி யாக வங்காளப் பிரிவினையை அறி வித்தது. அதற்கெதிரான விடுதலை போராட்டம் சுதேசி இயக்கமாக, சுயாட்சி உரிமை முழக்கமாக நாடெங்கும் விரிந்தது. வங்கப் பிரிவினைக்கு எதி ரான சுதேசி இயக்கம், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை, தஞ்சை, சேலம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் வெடித்தன. வ உ சி, சுப்ரமணிய சிவா, சர்க்கரைச் செட்டியார், பாரதி போன்ற பல திறன் மிகு இளைஞர்களை அடையாளம் கண்டது, தமிழக சுதேசி இயக்கத்தின் ஒரு சிறப்பு. சுதேசமித்திரன் போன்று, சுதேசி என்ற அடைமொழி கொண்ட, பல இதழ்கள் வெளிவரத் தொடங்கியது மற்றொரு சிறப்பு. இன்னுமொரு முக்கியமான சிறப்பும் அதற்குண்டு. வங்கத்தில் இருந்ததைப் போல தேசிய இயக்கங்களிலிருந்து இஸ்லா மியர்களைப் பிரித்து வைத்த மத அடையாளங்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாட்டு விடுதலை இயக்கங்களில் இல்லை. இந்த விடு தலை இயக்கப் பின்புலத்தில்தான் சுதேசி கப்பல் நிறுவனம் களம் கண்டது; கப்பலோட்டும் வணிகத்தில் இருந்த ஆங்கிலேய ஏகபோகத்திற்கும் இந்தியாவை காலனி நாடாக மாற்றிய ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கும் வந்து பார் என்று சவால்விட்டது. வீறு கொண்டெழுந்த சுதேசி இயக்கத்தால் கப்பல் வணிகம் என்ற கரு வ உ சி உள்ளத்தில்  சூல் கொண்டது;

அக்கரு வளர்ந்து செயலாக்கம் பெற உள்ளூர் சூழலைச் சாதமாக, சாதுர்யமாகப் பயன் படுத்திக் கொண்டார். வ உ சி.  தூத்துக்குடியில் ஏற்றுமதி இறக்கு மதி வணிகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்த கர்களை ஆங்கில கப்பல் நிறுவனங் களும் அவற்றின் தரகர்களும் இழி வாக நடத்தினர்; இதனால் உள்ளூர் வர்த்தகர்கள் உள்ளத்தில் அந்நிய நிறுவனத்திற்கு எதிரான கனல் குடி கொண்டிருந்தது; அந்நியனிடம் ஏன் கையேந்த வேண்டும், மூலதனம் திரட்டுவோம்,  நாமே கப்பலோட்டுவோம் என்று சொல்லி வ உ சி அக்கனலில் நெய் வார்க்க, சுதேசி கப்பல் என்ற  நிறுவனம் உயிர் பெற்றது. அதற்கு  முன்னரே ரவீந்திரநாத் தாகூரின் தம்பி, டாடா உள்ளிட்ட பலரின் இந்திய கப்பல் வணிக நிறுவனங்கள் பிற‌ந்தன, இறந்தன. அந்நிறுவனங்களுக்கும் வ உ சி யின் சுதேசி கப்பல் நிறுவனத்திற் கும் ஒரு பெரிய வேறுபாடு இருந்தது; அவர்களின் கப்பல்கள் நீராவியில் ஓடின; சுதேசி கப்பல் வெறும் நீராவி யால் மட்டும் ஓடவில்லை, தேசப்பற்றா லும் ஓடியது. சுதேசியம் அதன் DNAவாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின்  சூரத் மாநாட்டில் தனியாகக் கூடிய தீவிர வாத குழு அதன் சென்னை மாகாண செயலாளராக வஉசியைத் தேர்ந்தெடுத்தது. இந்திய விடுதலை இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வ உ சி தமிழ்நாடெங்கும் சுற்றி மக்களைத் திரட்டினார் அவர் பேசுகிற கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் வந்தனர். பொதுவெளியில், அரசியல் பரப்புரைகளில் தமிழில் பேசிய முதல்  தலைவன் என்ற பெருமை அவருக்கு உண்டு. வளர்ந்து வந்த வஉசியின் மக்கள் செல்வாக்குக் கண்டு அந்நிய அரசு கலக்கமுற்றது; கொடிய அடக்குமுறையாலும் வஞ்சகத்தாலும் வ உ சி யை வீழ்த்தத் திட்டமிட்டது. அத்திட்டத்திற்கான உள்ளடி வேலை சுதேசி கப்பல் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான குருசாமி அய்யரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1907 ம் ஆண்டிலேயே தன் வஞ்சகப் பணியைத் தொடங்கி, மெல்ல மெல்ல  பிற இயக்குநர்களையும் தன் வலைக் குள் இழுத்துக் கொண்ட குருசாமி அய்யரின் வசம் சுதேசி கப்பலின் நிர்வாகம் வந்தது. 1908 மார்ச் மாதம் 8ம் நாள் கூடிய இயக்குநர்கள்  வஉசி யை அழைத்து சுதேசி கப்பலோடு தொடர்ந்து இயங்க அரசியல் கூட்டங் களில் பேசக் கூடாது என ஆணை யிட்டது. அதற்குப் பதிலடியாக அன்றி ரவே தூத்துக்குடியில் 4000 பேர் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் வ உ சி அனல் தெறிக்க உரையாற்ற, மாவட்ட நிர்வாகம் அடக்குமுறை படலத்தைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக வ உ சியும், சுப்ர மணிய சிவாவும் கைது செய்யப்பட்ட தும், அதை எதிர்த்து வெடித்த நெல்லை எழுச்சியும் துப்பாக்கிச் சூடும் யாவரும் அறிந்த வரலாற்றுப் பதிவுகள். அந்நிகழ்வைத் தொடர்ந்து நெல்லையில் சிறப்புக் காவல் படை யொன்று நிறுத்தப்படது. அதற்கான செலவுகளை ஈடுகட்ட நெல்லை மக்களிடம் தண்டனை வரி ஒன்று (Punitive Tax) வசூலிக்கப்பட்டக் கொடு மையை இப்புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. 

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வ உ சி சிறையில் செக்கி ழுத்து வாடிய போது, 22 வயதே நிரம்பி யிருந்த அவர் மனைவி மீனாட்சி நேர்கொண்ட துயரை இந்நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. கணவன் சிறையில், சித்தம் கலங்கிய கணவனின் தம்பி, மாமனாரின் மரணம், ஆயுள் தண்டனையை எதி்ர்த்த வழக்கிற்காக பணம் திரட்டவும் அலையவும் வேண்டிய சிரமம், சிறு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பப் பாரம் என்று நீள்கிற கண்ணீர் கதையை வாசிக்கப் போது மனம் சற்றுக் கலங்கி விடுகிறது. 1912ல் வ உ சி  விடுதலையானாலும் அவர் வழக்கறி ஞராகத் தொழில்புரிய தடை தொடர்ந் தது. சென்னையில் குடியேறிய அவரை ஒரு புறம் வறுமை வாட்டியது; மறுபுறம் அன்றைக்கு முன்னுக்கு வந்த காந்திய அரசியலை அவர் மனம் ஏற்கவில்லை. அவருடன் சுதேசி இயக்கத்தில் பங்கேற்ற பாரதி சிவா உள்ளிட்ட நெருக்கமான நண்பர்கள் சிலர் காந்தி வழியில் செல்ல, வேறு சிலர் இந்து மகாசபை பக்கம் செல்ல, வஉசிக்கு இரண்டிலும் பிடித்தம் இல்லை. பிராமண ஆதிக்கத்தின் கீழிருந்த அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் அவரை ஓரம் கட்டியது. ஆக, அரசியலிலிருந்து ஒதுங்கிய வ உ சி தொழிற்சங்கப் பணியில் கவனம் செலுத்தினார். திருக்குறளுக்கு உரை, சிவஞானபோதத்திற்கு உரை என்று அவரின் இலக்கியப் பணி விரிகிறது. சிறையிலிருந்து விடுதலையான பின்னர் 24 ஆண்டுகள் வாழ்ந்தும், பல  புத்தகங்களை வெளியிட்டும், தொழிற் சங்கப் பணி ஆற்றியும் வந்த அந்த வேளையிலும் வ உ சி தனது பெரும் சாதனைகளை எங்கும் பேசவில்லை. என்ன காரணம்? அடக்கமா? ஏமாற்றமா? குடும்பமே சிதறுண்டு போன சோகமா? துரோகத்தைக் கண்ட வெறுப்பா? சுயராஜியம் பெற முடியாத அரசியல் தோல்வியா? இப்படி பல கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலோடு நூல் நிறைவு பெறுகிறது. அந்த பதில்… நிறைகுடம் தளும்பாது, ஆழமான கடலில் அலைகள் ததும்புவதில்லை என்ற பொருள்படும் ஒற்றை வரி...

SWADESHI STEAM
ஆசிரியர்:ஏ.ஆர்.வெங்கடாசலபதி
பக்கம்: 500 / விலை: ரூ.600
வெளியீடு : பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா