tamilnadu

img

சென்னை தலைமைச் செயலக கட்டிடத்தில் விரிசலா? அமைச்சர் விளக்கம்

சென்னை,அக்.24- சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வியாழனன்று (அக்.24) நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இதனால் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாமக்கல் கவிஞர் மாளிகை 1974 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இதன் முதல் தளத்தில் வேளாண்மை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக ஆய்வு செய்தேன். பொறியாளர்களும் உடனிருந்தனர். கட்டிடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும் உருக்குலையவில்லை. அது உறுதியாக இருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு டைல்ஸ் பதிக்கப்பட்டது. இந்த டைல்ஸ் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார்.