தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் 6 பேர் பலி
தஞ்சாவூர், மே 22– கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் 12 பேர், புதன்கிழமை காலை வேளாங்கன்னிக்கு, டெம்போ டூரிஸ்ட் வேனில் சுற்றுலா வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள, செங்கிப்பட்டி பகுதியில் வந்தபோது, உயர்மட்ட பாலத்தின் சாலையில் தார்ச் சாலை அமைப்பதற்காக, ஒரு வழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து. பாலத்தின் மறு முனையில் தஞ்சாவூரில் திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பயணிகளை செங்கிப்பட்டியில் இறக்கி விட்டு, திருச்சிக்கு புறப்பட்டது. அப்போது, டெம்போ டூரிஸ்ட் வேன் அதிவேகமாக சென்ற நிலையில், பேருந்து மீது மோதி, வேனின் முன்பகுதி உடைந்து சேதமடைந்தது. இவ்விபத்தில், ஆறு பேர் சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் இறந்தனர். இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.