திருச்சி,அக்.16- டெல்டா மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் 22 ஆயிரம் மீனவர்கள் 3 ஆவது நாளாக புதனன்றும் கடலுக்கு செல்லவில்லை. நாகை, காரைக்காலில் முதலாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களி லும் மழை நீடிக்கிறது. நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2800 விசைபடகுகள், பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 2,000, மயிலாடு துறை மாவட்டத்தில் 5000 மீனவர்கள், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முதல் கட்டு மாவடி வரை 27 மீனவ கிராமங்களில் 3000 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுகையில் 2 நாளில் ரூ.100 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து நிறுத்தம் நாகை-இலங்கை இடையே இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் தெரிவித்தார்.