சென்னையில் இன்று தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
சென்னை, ஏப் 24 வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வெள்ளியன்று (ஏப்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என சென்னை மாவட்டஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8 ம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ,பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள்தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
வண்டலூர்,ஏப்.24- கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில் ஆயிஷா, மகேஷ்வரி, அம்மினி, ஆகிய 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகளை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகைபறிப்பில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நகைபறிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். இதில் உத்தரபிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும் அவரிகளில் 2 பேர் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட சென்னைக்கு ரயிலில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் சுற்றிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய், சோகான் தபஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இன்றைய நிகழ்ச்சி
கவிஞர் பாரிகபிலனின் அம்மாயி கும்பிட்டசாமி கவிதை நூல் வெளியிட்டுவிழா - இடம்: தோழர் எஸ்விஎஸ் மணி நினைவரங்கம்,1-பி ஆற்காடு சாலை, வடபழனி பேருந்து நிலையம் அருகில், சென்னை-28 ஓட்டல் அடையார் ஆனந்தபவன் பின்புறம். மாலை 5.30மணிஅளவில். நூல் வெளியிடுபவர் தமுஎகச மூத்த தலைவர் வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன், பெற்றுக்கொள்பவர்-வழக்குரைஞர் அருள்மொழி(திக), பங்கேற்பு: ஓவியர் கு.புகழேந்தி, ஏ.நடராசன்(சிபிஎம்), கவிஞர்கள் ச.விசயலட்சுமி, மு.முருகேஷ், சி.எம்.குமார், ஏற்பாடு: தமுஎகச தென்சென்னை.