குமரி 6 ஆவது புத்தகக் கண்காட்சியினை 2 லட்சம் பேர் பார்வையிட்டனர் நிறைவு விழாவில் ஆட்சியர் பெருமிதம்
குமரி மாவட்ட 6 ஆவது புத்தக கண்காட்சியினை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா பெருமிதத்துடன் கூறினார். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) (க்ஷஹஞஹளுஐ) சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குமரி மாவட்ட 6-வது புத்தகத்திருவிழா கண்காட்சி நடைபெற்றது. மார்ச் 1 அன்று நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா பேசியதாவது: கடந்த ஆண்டை விட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் 6 ஆவது புத்தகக் கண்காட்சியை வந்து பார்வையிட்டுள்ளனர். அதிகளவில் மக்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றுள்ளனர். குறிப்பாக பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள் இப்புத்தகக்கண்காட்சியில் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கியுள்ளனர். பொதுநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உள்ளிட்டோரும் தங்களது பங்களிப்பினை அதிகளவு செலுத்தியுள்ளன. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 11 (01.03.2025) நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 அரங்குகளை அதிகமானோர் பார்வையிட்டதோடு, சுமார் ரூ.70 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரை மதிப்பில் புத்தகங்கள் விற்கப்பட்டன என எதிர்பார்க்கப்படுகிறது என்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ஆட்சியர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.