சென்னை, ஜூலை 30- விடுதிகள் மற்றும் பேயிங் கெஸ்ட் (பணம் செலுத்தும் விருந்தினராக தங்கியிருத்தல்) ஆகியவற்றின் வாடகை கட்டணத்துடன் 12 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் கீழ் செயல்படும் அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான இரண்டு தனித்தனி வழக்குகளில், தங்கும் விடுதிகள் என்பவை குடியிருப்புகளுக்கு நிகரானவை அல்ல என்றும், எனவே சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படாது என்றும் அட்வான்ஸ் ரூலிங் ஆணையத்தின், பெங்களூரு அமர்வு தெரிவித்துள்ளது. தனித்தனி சமையல் அறை வசதி இல்லாமல் ஒரு அறையை பலரும் பகிரும் விதமான அமைப்பில் உள்ள விடுதிகள், குடியிருப்பு என்ற வகையில் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி வரி விலக்கு விடுதிகள் மற்றும் பேயிங் கெஸ்டுகளுக்கு பொருந்தாது என்றும் அட்வான்ஸ் ரூலிங் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தினசரி 1000 ரூபாய்க்கு கீழ் வாடகை கட்டணத்திற்கு இருந்த வரி விலக்கு கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது என்றும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஹாஸ்டல்கள் மற்றும் பேயிங் கெஸ்டுகளின் கட்டணம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்களே ஹாஸ்டல்கள் மற்றும் பேயிங் கெஸ்டு மையங்களில் அதிகம் தங்கியுள்ளனர். இந்நிலையில் இவற்றுக்கான வாடகை கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படுவது அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.