சென்னை, அக்.29- தீபாவளியை முன்னிட்டு திங்களன்று இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னையைப் பொறுத்தவரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயங்குகின்றன. முதல் நாளான திங்கள் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 369 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிலையில், திங்களன்று 2,461 பேருந்துகளில் 1 லட்சத்து 10,475 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்வதற்காக இதுவரை 1,43,862 பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.