புனே:
காரில் கயிற்றை கட்டி ரூ.30 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை இழுத்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே, யவாத் பகுதியில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு ஞாயிறன்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் சிலர், ஏடிஎம் மையத்தின் கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற ஸ்பிரே அடித்து மறைத்தனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை காரில் கட்டி, காரை இயங்க வைத்து ஏடிஎம் எந்திரத்தை அடியோடு பெயர்த்து இழுத்துச் சென்றனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை காரில் தூக்கிப் போட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இந்த கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அடியோடு பெயர்த்து கொள்ளையடித்து செல்லப்பட்ட ஏடிஎம் எந்திரத்தில் ரூ.30 லட்சம் வரை இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.