மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சாங்லி மாவட்டத்தில் உள்ள சிறையில் வெள்ளநீர் புகுந்துள்ளது.கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உட்பட பெருமழை பெய்து வருகிறது. மும்பை உட்பட பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் மேற்கு பகுதியில் உள்ள சாங்லி மாவட்டத்தின் சிறையில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் கைதிகள் அனைவரும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புனே பிராந்தியத்தில் (புனே, சதாரா, கோலாப்பூர், சாங்லி மாவட்டங்கள் உட்பட) சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் உள்ளனர். ஆனால் சாங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சாங்லி-கோலாப்பூர் மற்றும் மும்பை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.