tamilnadu

img

மகாராஷ்டிராவில் கடந்த நான்கு ஆண்டுகளில் 12,021 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் கடந்த நான்கு ஆண்டுகளில் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபையில் அம்மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் கடந்த நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை குறித்து எழுது பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார். அதில், 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில், 6,888 பேர் மாநில அரசின் நிவாரண உதவியைப் பெற தகுதியுடையவர்கள் என மாவட்ட அளவிலான கமிட்டிகள் கூறுகின்றன. இதுவரை தற்கொலை செய்து கொண்ட 6,845 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவியாக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை 610 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், 192 பேர் அரசின் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள். 192 பேரில் 182 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், விவசாயிகளுக்கு சரியான முறையில் விவசாய கடன்கள் அளிக்கப் படவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம். அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்குச் சரியாக சென்று சேரவில்லை. கடனை அடைக்க முடியாமல் இன்னலுக்கு ஆளாகும் விவசாயிகள் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வதால் பல விவசாயிகளின் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.