மன்னார்குடி: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே மணப்புரம் என்ற விவசாயக் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடச்சாரியார், செல்லம்மாள் தம்பதியின் மகன்களாகப் பிறந்தவர்கள் ராமசாமியும், சீனிவாசனும். இவர்கள் தான் பின்னாளில் முக்தா சீனிவாசன், ராமசாமி என்றழைக்கப்பட்டவர்கள். 1945 ல் முக்தா ராமசாமி மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். பிறகு அதன் நிறுவனர்டி.ஆர்.சுந்தரம் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாகப் பொறுப்பில் உயர்த்தி, படத்தின் நிர்வாகத் தரப்பு வேலைகளை கவனிக்கவும் வைத்தார். தனது ஈடுபாட்டையும் உழைப்பையும் திறம்படச் செலுத்தி டி.ஆர்.எஸ்ஸிடம் நற்பெயரையும் நம்பிக்கையும் பெற்றார். இதற்கிடையில் தஞ்சை மாவட்டத்தில் பொதுவுடைமை இயக்கம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று கூலி உயர்வு இயக்கம் பெரும் போராட்டமாக வெடித்திருந்தது. அரசுப் பணியிலிருந்த சீனிவாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சிப் பணியிலும் ஈடுபாடு காட்டினார். 1946 ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்ட சீனிவாசன் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.
துடிப்பான தம்பி சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து ஒடோடி வந்தார் ராமசாமி. தம்பியை வழக்கிலிருந்து விடுவித்து கையோடு சேலத்துக்குக் கூட்டிச் சென்றார். சீனிவாசனை டிஆர்.சுந்தரத்தின் உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி ராமசாமி வேண்டுகோள் வைத்தார். டி.ஆர்.எஸ் ஸும் அந்த கணமே உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோருடன் மந்திரி குமாரி படத்தில் இணைந்து வேலை செய்தார் சீனிவாசன். போதிய பயிற்சியும், அனுபவமும் பெற்ற பிறகு முக்தா வி. சீனிவாசன் முதல் முதலாக இயக்கிய படமான முதலாளி 1957 ல் வெளியாகி வெற்றி பெற்றது. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் வென்றது. தம்பி இயக்கிய படங்களை அண்ணன் ராமசாமி விநியோகம் செய்து வந்தார். இதை தொடர்ந்து நாலு வேலி நிலம், தாமரைக்குளம் போன்ற அவரது தொடக்கக்கால படங்கள் பொதுவுடைமை கருத்துக்களின் தீவிர தாக்கம் கொண்டவையாக இருந்தன.ஆனால் அவை வரிசையாக தோல்வியையும் சந்தித்தன. இந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் தந்தை இயக்குநர் கே.சுப்பிரமணியம் முக்தா சகோதரர்கள் இருவரையும் அழைத்து சொந்த பட நிறுவனம் தொடங்கும்படி அறிவுறுத்த 1960 ல் உதயமானது முக்தா பிலிம்ஸ்.