tamilnadu

img

நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க கோரும் பெரம்பலூர் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

பெரம்பலூர், ஆக.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநிலக்குழு எம்.சின்னதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்.மணிவேல், என்.செல்லதுரை, பி.ரமேஷ், எ.கலையரசி, எம்.இளங்கோவன் கே.மகாராஜன், பி.துரைசாமி, எஸ்.பி.டி.ராஜாங்கம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதாகக் கூறி 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை 2007-ஆம் ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த ஜீவிகே குழுமம் மற்றும் இந்திய பெருவணிகத் துறையினர்(டிட்கோ) விவசாயிகளிடம் கேட்ட போது, இந்த நிலத்தை விட்டால் எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை என்று கூறினர். அதற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பளிப்பதாகவும், மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு வீட்டுமனை வழங்குவதாகவும் நிலத்திற்குண்டான விலையும் தருவதாக உறுதியளித்தனர். மேற்படி உறுதியளித்ததையொட்டி எட்டு கிராம விவசாயிகள் மூவாயிரம் ஏக்கர் நிலத்தை சொற்ப விலைக்கு அளித்தனர். மேலும் 827 கோடி ரூபாய் மதிப்பில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.  இத்திட்டம் அமைக்கப்பட்டால் பெரம்பலூர் மாவட்டம் சிங்கப்பூராக மாறி விடும் என்றும் அறிவித்தனர். ஆனால் 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை 2013-ல் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என அறிவித்தார். அவர் மறைந்த பிறகு அம்மாவின் அரசு நடைபெறுவதாக கூறி ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மேற்படி மூவாயிரம் ஏக்கர் நிலங்களும் பயனற்ற நிலையில் தரிசாக கிடக்கிறது. எனவே நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளின்படி ஐந்து ஆண்டுகளுக்குள் அறிவித்த திட்டம் செயல்படுத்தா விட்டால் நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சட்டவிதிகளை மதிக்காமல் செயல்படும் ஜீவிகே குழுமம் மற்றும் இந்திய பெருவணிகத்துறை(டிட்கோ) நிறுவனங்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதனை கண்டித்து செப்டம்பர் 30-ஆம் தேதி பி.சீனிவாசராவ் நினைவு தினத்தன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் தலைமையில் நிலத்தில் இறங்கி கையகப்படுத்தி விவசாயிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பெரம்பலூர்- அரியலூர் மாவட்டக் குழு முழு ஆதரவு அளிப்பது என  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபெற உள்ள போராட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.